இலங்கைக்கான இத்தாலி தூதுவர் ரீட்டா ஜி. மெனல்லா (Rita Giuliana Manella) இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.
புதிதாக பதவியேற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இத்தாலி அரசாங்கத்தின் சார்பில் வாழ்த்து தெரிவித்த இத்தாலி தூதுவர், புதிய நோக்குடன் முன்னோக்கி பயணிக்கும் இலங்கையுடன் பரந்த ஒத்துழைப்புடன் செயற்பட தமது அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் புதிய வேலைத்திட்டத்துடன் பொருளாதாரம், சமூகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இலங்கை துரிதமாக முன்னோக்கிப் பயணிக்கும் என நம்பிக்கை வெளியிட்ட தூதுவர், அவற்றை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு உயரிய ஒத்துழைப்பினை பெற்றுத் தருவதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே இலங்கைக்கான நோர்வே தூதுவர் ரைனி ஜொரன்லி எஸ்கேடல் (Trine Joranli Eskedal) உள்ளிட்ட தூதுக் குழுவினர் இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தனர்.
நோர்வே தூதுவர் உள்ளிட்ட தூதுக் குழுவினர் ஜனாதிபதிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, புதிய நோக்குடனும் வலுவான பின்னணியுடனும் முன்னெடுக்கப்படும் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு தமது அரசாங்கம் உயரிய ஒத்துழைப்பினை பெற்றுத் தருமென நோர்வே தூதுவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment