சீரற்ற காலநிலையால் 4,252 குடும்பங்களைச் சேர்ந்த 14,468 பேர் பாதிப்பு - 5 பேர் பலி - 5 மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை நீடிப்பு - இன்னும் 2 தினங்களுக்கு கடும் மழை - News View

About Us

Add+Banner

Wednesday, December 4, 2019

demo-image

சீரற்ற காலநிலையால் 4,252 குடும்பங்களைச் சேர்ந்த 14,468 பேர் பாதிப்பு - 5 பேர் பலி - 5 மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை நீடிப்பு - இன்னும் 2 தினங்களுக்கு கடும் மழை

Cyclone-800x445
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 4,252 குடும்பங்களைச் சேர்ந்த 14,468 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 

பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதுடன், பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பிரகாரம் முப்படையினரும், பொலிஸாரும் பொது மக்களுக்கான நலன்புரி விடங்களை முன்னெடுத்து வருகின்றனர். 

கிழக்கு மாகாணத்தில் 1,688 குடும்பங்களைச் சேர்ந்த 5,918 பேரும், வடமாகாணத்தில் 301 குடும்பங்களைச் சேர்ந்த 918 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 138 பேரும், மத்திய மாகாணத்தில் 1,958 குடும்பங்களைச் சேர்ந்த 758 பேரும், வடமேல் மாகாணத்தில் 1,634 குடும்பங்களைச் சேர்ந்த 5,335 பேரும், வட மத்திய மாகாணத்தில் 99 குடும்பங்களைச் சேர்ந்த 304 பேரும், ஊவா மாகாணத்தில் 302 குடும்பங்களைச் சேர்ந்த 1,097 பேரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 

சீரற்ற காலநிலையின் காரணாக 14 மாவட்டங்களில் வாழும் மக்கள் பாரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதுடன், மொத்தமாக 34 பிரதேச செயலாளர் பிரிவுகள் இந்த இயற்கை பேரிடரை எதிர்கொண்டுள்ளது. 946 குடும்பங்களைச் சேர்ந்த 3,149 பேர் 29 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ் அனர்த்தத்தில் 5 பேர் பலியானதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர். இதுவரை ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. 

இவர்களுக்கான நிவாரண நடவடிக்கைள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பிரதேச செயலகங்களால் முன்னெடுக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். அத்துடன், கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை ஓரளவு வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் அனர்த்தம் குறைவான பகுதி மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் கூறினார். 

களு கங்கை, ஜின் கங்கை மற்றும் நில்வளா, அத்தனகலா ஓயா, மஹா ஓயா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்திருந்த போதிலும் தற்போது குறைவடைந்துள்ளன. களுகங்கை பாய்ந்தோடும் சில பிரதேசங்களுக்கு வெள்ள எச்சரிக்கை தொடர்ந்து விடுக்கப்பட்டுள்ளன. 

இரத்தினபுரி, பதுளை, கேகாலை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு சிகப்பு எச்சிரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது. 

இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொடை மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலகத்திற்கு உட்பட பல இடங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல, பசறை, லுணுகல, எல்ல, ஹாலிஎல்ல, பதுளை, பண்டாரவளை உள்ளிட்ட பிரதேசங்களுக்கும் கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட, வரக்காபொல, தெரணியகலை, எட்டியாந்தோட்டை உள்ளிட்ட பிரதேசங்களுக்கும் மண்சரவிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, இலங்கையின் தெற்கு ஆழ்கடலில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு மழை வீழ்ச்சி சற்று அதிகமாக இருக்குமென வளிமண்டலவியல் தினைக்களம் அறிவித்துள்ளது. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை உட்பட நாட்டின் ஏனைய மாவட்டங்களில் 100 மில்லி மீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும். மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *