நாட்டின் பல பிரதேசங்களில் தற்போது ஏற்பட்டுள்ள மழை நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, சீரற்ற காலநிலை உள்ளிட்ட பல்வேறு அனர்த்த நிலை காரணமாக நாடு முழுவதும் இதுவரை 643 குடும்பங்களைச் சேர்ந்த 2,255 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மண்முனை வடக்கில் 342 குடும்பங்களைச் சேர்ந்த 1,116 பேரும், காத்தான்குடியில் 67 குடும்பங்களைச் சேர்ந்த 262 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிலையம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட நபர்கள், நாவற்குடா கிழக்கு பாலர் பாடசாலையிலும், காத்தான்குடி பதுரியா மற்றும் காத்தான்குடி பல்தேவை கட்டடத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பலர் உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, அம்பாறையில் 37 குடும்பங்களைச் சேர்ந்த 144 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமேல், மேல், சப்ரகமுவ மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, வடமேல், மேல், சப்ரகமுவ மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமேல், மேல், சப்ரகமுவ மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில், குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம், குருநாகல், கம்பஹா, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
நாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
காங்கேசந்துறையிலிருந்து பொத்துவில்ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் தென்கிழக்கு முதல் தெற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகளில் கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.காங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானதுஅவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையான) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும்கொந்தளிப்பாகவும்காணப்படும்.
No comments:
Post a Comment