இலங்கை மீனவர்களையும் விடுவிக்க ஜனாதிபதி வலியுறுத்த வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 30, 2019

இலங்கை மீனவர்களையும் விடுவிக்க ஜனாதிபதி வலியுறுத்த வேண்டும்

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்திய விஜயத்தின் போது இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிப்பதாக தெரிவித்துள்ள கருத்தை வரவேற்பதாகவும், இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று (30) ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்திய விஜயத்தின் போது இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிப்பதாக தெரிவித்துள்ள கருத்தை நான் வரவேற்கின்றேன்.

அதேவேளை எமது மீனவர்களும் அவர்களுடைய படகுகளுடன் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நீண்டகாலமாக சிறை வைக்கப்பட்டுள்ள இவர்களின் விடுதலை தொடர்பில் நாங்கள் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இவர்களின் குடும்பங்கள் இவர்களின் உழைப்பிலேயே தங்கியுள்ளனர். இம் மீனவர்கள் சிறைப்பட்டுள்ளமையினால் அவர்களினுடைய குடும்பங்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கி வருகின்றனர்.

பாடசாலை செல்லும் பிள்ளைகளினுடைய கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் பல இலட்சங்களை செலவு செய்து கொள்வனவு செய்யப்பட்ட படகுகள் போதிய பராமரிப்பு இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் பாவனைக்கு உதவாத நிலைக்கு தள்ளப்படுகின்றன.

பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாத நிலையில் அச்சத்தின் மத்தியிலேயே எம் மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய மீனவர்களை விடுவிக்கின்ற அதேவேளை சிறைபட்டிருக்கின்ற எம் உறவுகள் தொடர்பிலும் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்.

அவர்களின் விடுதலை தொடர்பிலும் இந்திய அரசாங்கத்துடன் பேசி அவர்களையும், படகுகளையும் மீட்டுத்தர வேண்டுமென செல்வம் அடைக்கலநாதன் எம்.பி ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னார் நிருபர் லெம்பட்

No comments:

Post a Comment