முன்னாள் அமைச்சர்களான ரிஷாட் பதியூதீன், ரவூப் ஹக்கீம், ராஜித சேனாரத்ன, ஹிஸ்புல்லா உள்ளிட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராவணா பலய அமைப்பின் இணைப்பாளரான இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பாளரான ஷாணி அபேசேகரவையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கடந்த காலங்களில் ரிஷாட், ஹக்கீம், ஹிஸ்புல்லா உள்ளிட்டவர்கள் இனவாதிகளாகவே செயற்பட்டார்கள். கிழக்கு மாகாணத்தை இந்த நாட்டின் வேறே ஒரு பகுதியாக இயக்கப்பார்த்தார்கள்.
இயற்கை மரங்களை அழித்துவிட்டு சவூதி அரேபிய மரங்களை இங்கே நட்டார்கள். இவர்கள் கடுமையாக இனவாதத்தை விதைத்து வந்தனர். அதேபோன்று திருடர்கள் நாட்டிலிருந்து தப்பிச்செல்லும் வழிகளை தடுக்க வேண்டும்.
ரிஷாட் போன்றவர்கள் புறம்பான திருடர்கள். அதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. அதேவேளை நிஷாந்த டி சில்வா போன்றவர்கள் இன்று நாட்டிலிருந்து தப்பிச்செல்லும் நிலை உள்ளது. அவருக்கு உதவி செய்தவர்கள் இருக்கின்றனர்.
அதேபோல இரகசிய பொலிஸார் இந்த நாட்டிற்காக அல்லது வெளிநாடுகளுக்கா பணிபுரிந்திருக்கிறார்கள் என்கிற சந்தேகம் நிலவுகிறது.
அதன் முன்னாள் பொறுப்பதிகாரி ஷாணி அபேசேகரவை கைது செய்தால் பல இரகசிய தகவல்களையும் அம்பலப்படுத்த முடியும் என நம்புகிறோம்.
ஜெனிவாவில் எமக்கெதிரான சகல இரகசிய தகவல்களுக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சில அதிகாரிகளே பொறுப்புகூற வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment