தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தை தான் காட்டிக் கொடுத்ததாக கூறும் விடயமானது, ஒரு தவறான விடயம் என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவிக்கின்றார்.
அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே விநாயகமூர்த்தி முரளிதரன் இதனைக் குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை கருணா அம்மான் காட்டிக் கொடுத்ததாக எழுப்பப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தை பேச்சுவார்த்தையின் ஊடாக வெற்றி கொள்ள முடியும் என்ற நோக்கத்துடன், நோர்வே போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த ஆரம்பித்ததாகவும் அவர் கூறினார்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும், அப்பாவி உயிர்களை காப்பாற்ற வேண்டும் எனவும் தான் ஒரு எண்ணத்தை கொண்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், தனது அந்த நிலைப்பாட்டை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் விரும்பமில்லை என கூறிய அவர், அதனால் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து தான் வெளியேறியதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கருணா அம்மான் மாத்திரமே காட்டிக் கொடுத்தார் என விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் ஒருபோதும் கூறவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.
எனினும், விடுதலைப் போராட்டம் தொடர்பில் அறியாத நடுவிலுள்ள சிலரே தான் விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்ததாக பிரசாரம் செய்து வருவதாகவும் கருணா தெரிவிக்கிறார்.
பிபிசி தமிழ்
No comments:
Post a Comment