காணாமலாக்கப்பட்டோர் எந்தக் காலத்திலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளை அசிங்கப்படுத்தவில்லை. தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு, தமிழ் மக்கள் பிரதிநிதிகளாக வரத்துடிக்கும் அரசியல்வாதிகளே பணத்தைக் கொடுத்து ஓட்டோக் காரர்களையும் வீதியால் செல்பவர்களையும் ஏவிவிட்டு சம்பந்தன், சுமந்திரனை பேசு, செருப்பால் எறி என்று அசிங்கப்படுத்துகின்றார்கள். இந்தச் சம்பவத்துக்கும் காணாமலாக்கப்பட்டோர் சங்கத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
இவ்வாறு தெரிவித்துள்ளார் காணாமலாக்கப்பட்டோர் சங்கத் தலைவி. யாழ்.ஊடக மையத்தில் ஊடக சந்திப்பு நடத்தியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு மிக அண்மைக் காலமாக எமது போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாகவும் எமது போராட்டத்தை உடைக்கும் விதமாகவும் பலவித முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதை எதிரிகள் செய்தால் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக வரத் துடிப்பவர்கள் செய்கின்றமைதான் மிகுந்த கவலையான விடயம்.
இவர்களின் அரசியல் நடவடிக்கையை இன்று சமூகம் விமர்சித்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் அவர்கள் எமது போராட்டத்துக்குள்ளும் நுழைந்து மிகக் கேவலமான வேலைகளைச் செய்கின்றார்கள். வவுனியாவில் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது ஓட்டோ டிறைவர்களையும் பாதையால் போகுபவர்கள் வருபவர்களையும் பணம்கொடுத்து அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
ஆனால் இவர்கள் திடீரென்று அங்கு சென்று கந்த சுவாமி கோவிலில் இருந்து வருவதும் பொதி கொடுப்பதுமாக அவர்களுக்கு உயிர்ப்பூட்டி, எங்காவது கூட்டமைப்பு கூட்டம் நடத்தினால் இவர்களை ஏவிவிட்டு, அங்கு சென்று சுமந்திரனைப் பேசு, சம்பந்தனை பேசு, சுமந்திரனுக்கு செருப்பாலை அடி என்று ஏவிவிடுகின்ற அந்தச் செயல்களுக்கு அவர்களுக்கு ஓர் அமைப்பு தேவைப்பட்டது. அது எமது காணாமலாக்கப்பட்டோர் அமைப்பாக இருக்கக்கூடாது.
இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை எப்படி நம்பமுடியும். இவர்கள் மக்களுக்கு சேவை செய்வார்கள் என்று எவ்வாறு நம்பமுடியும், பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுப்பார்கள் என்று எவ்வாறு நம்பமுடியும்? தங்கள் சுயலாபத்துக்காக இவர்கள் எமது வலிந்து காணாமலாக்கப்பட்டோர் அமைப்பைப் பயன்படுத்துகின்றார்கள். மக்கள்தான் விழிப்படைய வேண்டும். இவர்களின் வங்குரோத்து அரசியல் விரைவில் வெளிவரும் – என்றார்.
No comments:
Post a Comment