மீண்டும் ஒரு ஏமாற்று நாடகம்தான் நடக்கிறது - எழுக தமிழில் கலந்து கொண்டவர்களை விட பன்மடங்கினர் கோட்டாவின் கூட்டத்தில் கலந்து கொண்டனர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 5, 2019

மீண்டும் ஒரு ஏமாற்று நாடகம்தான் நடக்கிறது - எழுக தமிழில் கலந்து கொண்டவர்களை விட பன்மடங்கினர் கோட்டாவின் கூட்டத்தில் கலந்து கொண்டனர்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒருவிதமாகவும், சிங்களத்தில் வேறுவிதமாகவும் உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வடக்கு நிகழ்ச்சி இணை இணைப்பாளர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

ஒருமித்த நாடு என தமிழிலும், ஆங்கிலத்திலும் உள்ளது. ஆனால் ஒற்றையாட்சி என்பதற்கான பதம்தான் சிங்களத்தில் உள்ளது. இதனால் மீண்டும் ஒரு ஏமாற்று நாடகம்தான் இங்கு நடக்கிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “கோட்டாபயவின் மீது அபாண்டமான பழிகள் ஊடகங்களாலும், மற்றவர்களாலும் சொல்லப்பட்டு வந்த நிலையில், அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த கோட்டாபயவின் கூட்டத்தில் பெருமளவானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். 

எழுக தமிழில் கலந்து கொண்டவர்களை விட ஒப்பீட்டளவில் பன்மடங்கு அதிகளவில் கோட்டாவின் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதிலிருந்து எழுக தமிழிற்கா, கோட்டாபயவிற்காக மக்கள் ஆதரவுள்ளது என்பது தெரிய வருகிறது.

தமிழ் அரசுக் கட்சி எடுத்த முடிவு, யோகர் சுவாமி சொன்னதை போல எப்பவோ நடந்த முடிவு. ஆனால் மக்களை ஏமாற்றுவதற்காக தேர்தல் விஞ்ஞாபனம் வரட்டும், ஏனைய 5 கட்சிகளுடன் ஏதோ செய்கிறோம், தீர்மானம் எடுத்து வேட்பாளர்களிற்கு சமர்ப்பிக்கிறார்கள், அதை ஏற்பவர்களிற்கே ஆதரவு என அறிவித்து, காலத்தை இழுத்தடித்தார்கள்.

பல்கலைகழக மாணவர்கள்தான் பாவம். அவர்களுக்காக பரிதாபப்படுகிறேன். அவர்களின் காலத்தையும் வீணடித்து, ஏதோ செய்வதாக காட்டி, கடைசியில் தமது முடிவின்படி நடந்துள்ளார்கள்.

இதேவேளை, சஜித்தின் விஞ்ஞாபனத்தில் அதிகார பரவலாக்கல் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் இந்த நான்கரை வருடங்களாக இழுத்தடித்தார்கள். தீபாவளி, தைப்பொங்கல் என இழுத்தடித்து விட்டு, இப்பொழுது புதிய அரசியல் தீர்வென்கிறார்கள்.

முன்னாள் முதலமைச்சர் ஒரு ஆரோக்கியமான விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார். சஜித்தின் விஞ்ஞாபனத்தில் ஆங்கிலத்திலும், தமிழிலும் ஒருவிதமாகவும், சிங்களத்தில் வேறுவிதமாகவும் உள்ளதை அதற்குரிய சொல் விளக்கங்களுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

ஒருமித்த நாடு என தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ளது. ஆனால் ஒற்றையாட்சி என்பதற்கான பதம்தான் சிங்களத்தில் உள்ளது. அதனால் மீண்டும் ஒரு ஏமாற்று நாடகம்தான் இங்கு நடக்கிறது” என்றார்.

No comments:

Post a Comment