இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களில் 2 இலட்சத்து 50 ஆயிரம் வாக்குகளை ஒட்டக சின்னம் பெற்றால் நாங்கள்தான் இந்த நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற சக்தியாக மாற முடியும் என ஒட்டக சின்னத்தில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
ஒட்டக சின்னத்தில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் புத்தளம் கரைத்தீவு, மதுரங்குளி கடையாமோட்டை மற்றும் புத்தளம் ஹூதா பள்ளிக்கு அருகாமையில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில், முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அந்தப் பிரச்சினைகளை தேசிய, சர்வதேச மட்டத்திற்கு கொண்டுவருவதுடன், பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய ஒரு பலமான சமூகமாக கடந்த காலங்களில் இருந்ததை விடவும் ஆட்சியை உருவாக்குகின்ற, உருவாக்கிய அதிகாரமுள்ள பங்காளர்களாக மாற வேண்டும் என்பதற்காகவே நான் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.
இந்த நாட்டில் ஜனாதிபதி ஆட்சி முறைமை வந்ததும் நாம் பல தேர்தலுக்கு முகம் கொடுத்திருக்கிறோம். முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய பின்னர் 1988 ஆம் ஆண்டுகளில் நாம் சந்தித்தது முதலாவது ஜனாதிபதித் தேர்தலாகும்.
அப்போது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவை முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஆக்குவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. அந்த சந்தர்ப்பத்தில் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களை பாதுகாப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இரண்டு நாட்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அப்போதைய தலைவர் மர்ஹும் அஷ்ரப் தலைமையில் இடம்பெற்றன.
முஸ்லிம்களுக்கான தனி அலகு, முஸ்லிம்களின் நிரந்தர பாதுகாப்பை உறுதிப்படுத்த நிர்வாக அலகு போன்ற முஸ்லிம்கள் தொடர்பான பல விடயங்கள் உள்வாங்கப்பட்டிருந்தன. எனினும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுடன் ஏற்பட்ட சில முரண்பாடுகள் காணரமாக அந்தப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்த போது அந்த தேர்தல் கூட்டணியிலிருந்து அதிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் விலகியதுடன், எமது கொள்கைகளை ஆதரித்த ரணசிங்க பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கி அவரை இந்த நாட்டின் நிவைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஆக்கினோம்.
அன்றிலிருந்து இன்றுவரை நடைபெறுகின்ற ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளர்களோடு உடன்பாடுகளுடனும், உடன்பாடின்றியும் ஆதரவுகளை வழங்கி வருகின்றோம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அளுத்கம தாக்கப்பட்ட போது பள்ளிவாசல்கள் அடித்து நொருக்பபட்ட போது, முஸ்லிம்களின் பல கோடி சொத்துக்கள் சூரையாடப்பட்ட போது, பல உயிர்கள் துடிக்கத்துடிக்க கொல்லப்பட்ட போது இந்த நாட்டு முஸ்லிம்கள் மஹிந்த அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஒரு புதிய அரசாங்கத்தை கொண்டுவர வேண்டும் என்று தீர்மானித்தனர்.
முஹிந்த அரசுடன் எங்களுக்கு ஏற்பட்ட விரக்த்தியால்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவை எவ்விதமான உடன்படிக்கைகளும் செய்யாமல் ஆதரித்தோம். ஆனால், எங்களோடு ஒன்றாக பயணிக்கின்ற தமிழ் தலைவர்கள் தங்களது மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதனை முன்வைத்து ஐக்கிய தேசிய முன்னணியொடு உடன்படிக்கைகளை செய்தனர்.
வடக்கிலிருக்கும் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும், தமிழ் மக்களுடைய காணிகளை, வீடுகளை அவர்களிடம் மீளவும் கையளிக்க வேண்டும் என்று பல நிபந்தனைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் ஐயா தலைமையிலான குழு முன்வைத்தது.
ஆனால், எமது தலைமைகள் எந்த நிபந்தனைகளுமின்றி, பேச்சுவார்த்தைகளின்றி எமது அரசியல் தலைமைகள் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தனர்.
அதனால்தான் கடந்த ஐந்து வருட நல்லாட்சியில் முஸ்லிம் சமூகம் அனுபவிக்காத பல கஷ்டங்களையும், துன்பங்களை அனுபவித்தார்கள். அளுத்கம தாக்குதலுக்காக மஹிந்த அரசாங்கத்தை மாற்றி புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கியதன் ஊடாக அதேபோன்று பல அளுத்கமைகளை ஜின்தோன்தோட்ட தொடக்கம் மினுவாங்கொடை வரை திகன, தெல்தெனிய, அக்குறனை என்று 340 இற்கும் மேற்பட்ட சம்பவங்களை எமது முஸ்லிம் சமூகம் நல்லாட்சி அரசில் எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டது.
எங்களை எப்படியெல்லாம் நோவினை செய்ய முடியுமோ அபப்டியெல்லாம் நோகடித்தார்கள். அரபுக் கல்லூரிகளை இழுத்து மூட வேண்டும், ஷரிஆ சட்டங்களை மாற்ற வேண்டடும், பாடசாலைகளில் அரபு மொழி கற்பிக்கக் கூடாது என்று பரிந்துரைக்கின்ற அளவுக்கு நாம் முகம்கொடுத்தோம்.
நல்லாட்சி அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த நிபந்தனைகள் நல்லாட்சி அரசாங்கத்தில் நிறைவேற்றப்பட்டது. நான் கிழக்கு ஆளுநராக இருந்த போது பாதுகாப்புச் சபையில் உறுப்பினராக இருந்தேன். அப்பொது வடக்கில் சம்பந்தன் ஐயாவின் கோரிக்கைக்கு அமைய 98 இற்கும் மேற்பட்ட இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டன. பல ஏக்கர் காணிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
அதுபோல தமிழ் மக்கள் கனடா போன்ற சர்வதேச நாடுகளுக்குச் சென்றுவர வேண்டும். அதனால் கட்டுநாயக்கவுக்கு செல்வது பெரும் சிரமம் உள்ளது. எனவே, சர்வதேச விமான நிலையம் ஒன்றை அமைத்து தாருங்கள் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்கள். அதனையும் ரணில் விக்ரமசிங்க அரசு ஏற்றுக்கொண்டு தற்போது 2600 மில்லியன் ரூபா செலவில் சர்வதேச விமான நிலையமொன்றும் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அதுபோல மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்வைத்து மீனவத்துறைமுகங்கள் 7 அமைத்து தாருங்கள் என்று ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் கேட்டார்கள். அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போது மயிலிட்டு, நெல்லியடி பகுதிகளில் துறைமுகங்கள் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. இன்னும் ஐந்து துறைமுகங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அதுபோல 2 இலட்சம் வீடுகள் கட்டித்தாருங்கள் என்று கேட்டார்கள். அதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டு முதற்கட்டமாக 60 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இரண்டாம் கட்டத்தில் 50 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தமிழ் தலைவர்கள் தாம் சார்ந்த சமூகத்தின் பிரச்சினைகளை அடையளம் கண்டு, அதனை ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை செய்து நிபந்தனைகளுடன் ஒப்பந்தங்களை செய்து ஆதரவு வழங்கியது மாத்திரமின்றி, தாம் கேட்ட கோரிக்கைகளை மக்களுக்கு பெற்றுக் கொடுத்தமையை நாம் பெருமையாக பார்க்கிறோம். அதனை வரவேற்கிறோம். அவர்களை மனமாற பாராட்டுகிறோம்.
ஆனால், எமது முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றவர்கள், நாங்கள்தான் முஸ்லிம் சமூகத்தின் தலைவைர்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் ரவூப் ஹக்கீமும், ரிஷாத் பதியுதீனும் எவ்வித உடன்படிக்கைகளும் செய்யாமல் நல்லாட்சி அரசுக்கு ஆதரவு வழங்கினார்கள். அதனால் இந்த நான்கரை வருடங்களில் எமது மக்களுக்கு ஒரு வீட்டைக்கூட கட்டிக் கொடுக்கவில்லை. பிரச்சினைகளை தட்டிக்கேற்க முடியாத துர்பாக்கிய நிலையில் அதிகாரமற்ற ஒரு சமூகமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
நாம் சிறுபான்மையினர். ஒரு தேர்தல் காலத்தில்தான் எமது சமூகம் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் பற்றி பேச முடியும். எமது முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளின்றி சஜித் பிரேமதாசவும் ஜனாதிபதியாக வரமுடியாது. கோட்டபாய ராஜபக்ஷவும் ஜனாதிபதியாக முடியாது.
அவர்களுக்கு எங்களுடைய வாக்குகள் தேவை. தமிழ் தரப்பினர் மஹிந்தவுடன், சஜிதுடன், ரணில் விக்ரமசிங்கவுடன் இன்றும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். வாழ்வாதார பிரச்சினைகள், உரிமைகள் பற்றிய பிரச்சினைகள் பற்றி இன்னமும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இன்றும் தீர்மானத்திற்கு வரவில்லை. ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் அவர்கள் முன்னர் வைத்த பல கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்தாலும் இன்னும் நிபந்தனைகளை வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கிறார்னகள்.
எமது முஸ்லிம் சமூகம் இன்று பல கஷ்டங்களையும், துயரங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் மக்கள் எல்லோரும் பயங்கரவாதிகள், பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள். அவர்கள் பின்பற்றுகின்ற இயக்கங்கள் பயங்கரவாதத்தை போதிக்கினறது. எனவே, அதுபற்றி விசாரணை நடத்துவதற்காக சர்வதேச விசாரணைக் குழுவை வரவழைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
ஈராக், லிபியா, யெமன், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குள் புகுந்து சர்வதேச பயங்கரவாதத்திற்கான யுத்தம் என்ற பெயரில் முஸ்லிம் தலைவர்களை கொலை செய்து முஸ்லிம் மக்களை கொன்று குவித்து பிச்சையெடுக்கும் நிலைமைக்கு ஆலாக்கி சர்வதேச முஸ்லிம்களை சீரழத்தவர்களை இலங்கைக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.
இவ்வாறானதொரு சந்தர்பப்த்திலேயே நாம் ஜனாதிபதித் தேர்தலை சந்தித்திருக்கிறோம். எமது முஸ்லிம் மக்களுக்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கிறது. முன்னோர்கள் எமக்கு பெற்றுக்கொடுத்த அரசியல் உரிமைகளையெல்லாம் ஒவ்வொன்றாக பறித்தெடுப்பதற்கு இவர்கள் இன்று திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த புத்தளம் மக்களின் கருத்துக்களை மதிக்காமல் குப்பைகளை கொட்டுவதில் மிகத் தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஜிஹாத், அல்கைதா என்று இரண்டு நுல்களை எழுதினார். அந்த நூல்களில் அப்பட்டமான பொய்களை சொல்லி பௌத்த மக்கள் ஆத்திரமடையும் வகையில் நடக்காத சம்பவங்களை நடந்ததாக எழுதியிருந்தார்.
இந்த நாட்டுக்குள் பல் கட்டுவதற்காக சீனர்கள் எப்படி வந்து அதேபோன்று வெளியேறிப் போனார்களோ அதுபோல இலங்கை முஸ்லிம்களும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று அவர் சொல்லியிருந்தார். நாட்டில் உரிமை, சலுகை, அதிகாரங்கள் கேட்பதற்கு எவ்வித தகுதிகளும் கிடையாது. விரும்பினால் நாட்டில் வாழலாம் இல்லை நாட்டைவிட்டு வெளியேறலாம் என்று அவர் எழுதிய நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
இப்படி ஒரு இன துவேஷத்தை கக்கிய சம்பிக்க ரணவக்கதான் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவானால் அந்த அரசாங்கத்தில் தானே பிரதமராக தெரிவு செய்யப்படுவேன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். எனவே. சம்பிக்க ரணவக்க பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் முஸ்லிம் மக்களின் நிலை என்னவாகும் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியதில்லை. எனவே, இதுபற்றி எதுவுமே பேசாமலேயே ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் ஆதரவு வழங்கி வருகிறார்கள்.
எனவே. இந்த தேர்தலுக்குப் பின்னரான முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு, உரிமைகள், மதச்சுதந்திரம் என்பன பற்றி மிகத் தெளிவாக பேச வேண்டும். எமக்கு ரணில் விக்ரமசிங்கவும், சஜித் பிரேமதாச, மஹிந்த ராஜபக்ஷ, கோட்டபாய ராஜபக்ஷ என்று எல்லோரும் எமக்கு ஒன்றுதான். இந்த தேர்தல் களத்தில் வேட்பாளர்களாக களமிறங்கியிருக்கின்றவர்களிடம் எமது சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி பேச வேண்டும்.
பிரச்சினைகளை முன்வைக்க வேண்டும். உடன்பாடுகளை காண வேண்டும். எமது முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு அச்சப்பட்டால் எப்போதும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது.
அவ்வாறு பேசுவது இனவாதமல்ல என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். எமது பிரச்சினைகளளை சொல்லி உடன்பாடு காணாமல் ஒரு வேட்பாளருக்கு ஆதரவு வழங்கிவிட்டு அவர் வெற்றி பெற்றதும் பின்னர் எப்படி எல்லாம் கிடைக்க வேண்டும் எவ்வாறு எதிர்பார்ப்பது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.
நாம் தனிநாடு கோரவில்லை. வடகிழக்கை இணையுங்கள் என்று கேட்கவில்லை. இராணுவ முகாம்களை அகற்றுங்கள் என்று சொல்லவில்லை அதிகாரம் கேட்கவில்லை, 13வது சட்டத்தை அமுல்படுத்துங்கள் என்று கூறவில்லை, சமஷ்டி ஆட்சி கேட்கவில்லை.
எமது சமூகம் மானத்தோடும், மரியாதையோடும், கௌரவத்தோடும் பாதுகாப்போடும் மார்க்கக் கடமைகளை முன்னெடுத்து இந்த நாட்டில் வாழ வேண்டும் என்று நமது கனவு தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் கேட்டிருக்கிறோம்.
இந்த ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 விதத்திற்கு மேல் வாக்கு பெறமாட்டார்கள் என்று தேர்தல் ஆணையாளர் கூட தெரிவித்திருக்கிறார். எனவே, நாங்கள் 2 இலட்சத்து 50 ஆயிரம் வாக்குகளை பெற்றால் நாங்கள்தான் இந்த நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற சக்தியாக மாற முடியயும்.
நான் இந்தத் தேர்தலில் எதிர்பார்ப்பது 2 இலட்சத்து 50 ஆயிரம் வாக்குகளை மட்டும்தான். ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் கூடுதலான வாக்குகளை பெறாத நிலையில், வேட்பாளர் ஒருவர் ஆகக் கூடியது 62 இலட்ம் வாக்குகளை மட்டுமே பெற முடியும். அப்படி பெற்றாலும் முதலாவது சுற்றிலே அவர் ஜனாதிபதியாக வரமுடியாது.
அவர் ஜனாதிபதியாக வருவதற்காக நாம் ஒட்டக சின்னத்தில் பெற்ற வாக்குகளை வழங்குவதன் மூலம் இரண்டாவது சுற்றில் ஜனாதிபதியாக வரமுடியும். எமது கோரிக்கைகளை ஏற்றுள்ள ஒரு வேட்பாளர் இரண்டரை இலட்சம் வாக்குகளால் தோல்வியடையும். சுந்தர்ப்பத்தில் அவரையும் ஜனாதிபதியாக தீர்மானிக்க முடியும். அவ்வாறு தீர்மானிக்கின்ற போது இந்த சமூகம் இந்த நாட்டில் ஜனாதிபதியை திர்மானித்த ஒரு சமூகமாக பேசப்படும்.
நாம் ஆயிரக்கணக்கில் வாக்குகளை எந்தவொரு வேட்பாளருக்குப் போட்டாலும் பிரயோசனம் கிடையாது. அது கடலுக்குள் கரைத்த உப்பைப் போலவே காணப்படும். இலட்சக்கணக்காக வாக்குகளுக்குள் உங்களுடைய வாக்குகளும் போய் எந்தப் பெறுமானமும் இல்லாமல் போய்விடும். அது எவ்வித பயனையும் தரப்போவதில்லை.
ஒரு வேட்பாளர் வெறுமனவே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். எல்லோரையும் போல நாங்களும் பட்டாசு கொளுத்துவோம். ஆனால் அதனால் எமது சமூகம் வெற்றி பெறப் போவதில்லை. எமது பிரச்சினைகளை எப்போதுமே தீர்க்க மாட்டோம் என்பதை புரிந்துகொண்டு வாக்குகளை அளிக்க வேண்டும் என்றார்.
(புத்தளம் நிருபர் ரஸ்மின்)
No comments:
Post a Comment