யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆஜராக வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணைக்கு எதிராக தாம் முன்னர் விடுத்த உத்தரவில் எந்த மாற்றமும் இல்லை. அவ்உத்தரவு சட்டத்துக்கு மதிப்பளித்தே வழங்கப்பட்டது என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தீபாலி விஜேசுந்தர தெரிவித்தார்.
குறித்த வழக்கில், யாழ்.நீதவான் நீதிமன்ற கட்டளைக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றின் கட்டளையை மாற்றுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் மீதான விசாரணையின் போதே நீதியரசர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மனித உரிமை மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தம் ஆகியோர் காணாமற்போனமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவின் விசாரணைக்கு கோட்டாபய ராஜபக்ஷவை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக தான் யாழ்ப்பாணம் செல்ல முடியாதிருப்பதாக கோட்டாபய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கூறியதையடுத்து வடக்கு, கிழக்கு தவிர்ந்த தகுதிபெற்ற வேறு இடத்தில் அமைந்த நீதிமன்றமொன்றில் கோட்டாபயவின் சாட்சியம் பெறப்படலாமென்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தீபாலி விஜேசுந்தர உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment