கோட்டாபய வெற்றி பெற்றால் தமிழருக்கு நல்லது, பெரும்பான்மை சிங்கள வாக்குகளை அவரே பெறுவார் என்கின்றார் விக்கி - News View

About Us

About Us

Breaking

Monday, September 30, 2019

கோட்டாபய வெற்றி பெற்றால் தமிழருக்கு நல்லது, பெரும்பான்மை சிங்கள வாக்குகளை அவரே பெறுவார் என்கின்றார் விக்கி

கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் வென்றால் தமிழர்கள் மீண்டும் பழைய நிலைக்குப் போய் விடுவார்கள் என்று தமிழர்கள் அஞ்சுவது புரிகின்றது ஆனால் அவ்வாறு அவர் நடந்து கொள்ளமாட்டார் என்றே தோன்றுவதாக வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் அவரை உற்று நோக்கிக் கொண்டு இருக்கின்றமையினால் அவர் வந்தால் சர்வதேச ரீதியாக எமக்கு நன்மையே அல்லாது தீமையில்லை என தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்ட கேள்வி, பதில் அறிக்கையிலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும், “இம்முறை ஜனாதிபதித் தேர்தல் மிக முக்கியமானது. ஜனாதிபதி யார் என்ற அடிப்படையில்தான் பின்னர் பாராளுமன்ற தேர்தல்களும் மாகாண சபைத் தேர்தல்களும் நடக்கும்.

ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளருக்கே தமிழர்கள் வாக்களிப்பார்கள் என்றதொரு பொதுக் கருத்துண்டு. அதற்குக் காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.தே.கட்சிக்கு ஆதரவு அளித்து வந்தமையே. எப்படியும் தமக்கே தமிழர்கள் வாக்களிப்பார்கள் என்ற எண்ணத்தில் சஜித் இருந்தால் அவர் தன்னைத் தானே ஏமாற்றுபவர் ஆகிவிடுவார்.

கோட்டாபய ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் பெரும்பான்மை சிங்கள வாக்குகளை அவரே பெறுவார். தமிழர்கள் எவருக்கும் வாக்களிக்காமல் விட்டால் கட்டாயம் கோட்டாபய ராஜபக்ஷவே வெல்வார். கோட்டாவுக்கு எந்தத் தன்மானத் தமிழனும் வாக்களிக்க மாட்டார் என்று நான் முன்னர் கூறியுள்ளேன்.

சஜித் எந்தவித நன்மையைப் பெற்றுத் தருவேன் என்று தமிழர்களுக்கு கூறாது விட்டு தமிழர்கள் எவருக்கும் வாக்களியாது விட்டால் அது கோட்டாபய ராஜபக்ஷவுக்கே நன்மையாகப் போய்விடும். கோட்டாபய தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக என்ன செய்யப் போகின்றார் என்று எதுவும் கூறத்தேவையில்லை. ஆனால் சஜித் எமக்கு என்ன தரப் போகின்றார் என்று கூறாதுவிட்டு தமிழர்கள் அவருக்கு வாக்களிக்காது விட்டால் கட்டாயம் கோட்டாபய ராஜபக்ஷ வெல்வார்.

கோட்டாபய ராஜபக்ஷ வென்றால் தமிழர்கள் மீண்டும் பழைய நிலைக்குப் போய் விடுவார்கள் என்று தமிழர்கள் அஞ்சுவது புரிகின்றது. அவ்வாறு அவர் நடந்து கொள்ளமாட்டார் என்றே தோன்றுகின்றது. அந்த அளவுக்கு உலக நாடுகள் அவரை உற்று நோக்கிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் அவர் வந்தால் சர்வதேச ரீதியாக எமக்கு நன்மையே அல்லாது தீமையில்லை.

தற்போதிருக்கும் நிலையில் அவர் சீனாவைச் சார்ந்தே செல்ல வேண்டிய நிலையில் உள்ளார். இதை இந்தியாவும் அமெரிக்காவும் விரும்பமாட்டார்கள். அதனால் இந்தியாவும் அமெரிக்காவும் தமிழ் மக்கள் சார்பாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதொரு நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அது எமக்கு நன்மைதரும்” என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment