ஆள் மாறாட்டம் மற்றும் போலி ஆவணம் தயாரித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில், 67 வயதான நபர் ஒருவர் பத்தரமுல்லைலயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் (27) வலான குற்றத்தடுப்புக் குழுவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, பத்தரமுல்லை, தலங்கம பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
ஆள் மாறாட்டம், போலி ஆவணம் தயாரித்தமை, அதற்கான உபகரணங்களை வைத்திருந்தமை, பண மோசடி செய்தமை உள்ளிட்ட மோசடி குற்றச்சாட்டுகளின் பேரில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
விக்ரமசிங்கபுர, பத்தரமுல்லையைச் சேர்ந்த புளத்சிங்களகே கருணாரத்ன எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மற்றுமொருவருக்கு சொந்தமான மொழி பெயர்ப்பாளர் பதிவுச் சான்றிதழை வைத்திருந்துள்ளதோடு, அவரின் பெயரிலான இறப்பர் முத்திரை, போலி கையொப்பம் அடங்கிய வெற்று காகிதங்கள் 20 உள்ளிட்டவையும் அவரிடமிருந்து இதன்போது மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர், மொழி பெயர்ப்பாளராக தன்னை அடையாளப்படுத்தி, போலி ஆவணங்களை மோசடியாக தயாரித்து, மோசடியாக பணம் சம்பாதித்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, 4 கணனிகள், அச்சிடும் இயந்திரங்கள் 04 உள்ளிட்ட பொருட்களையும் குறித்த சந்தேகநபரிடமிருந்து பொலிசார் மீட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் சந்தேகநபர்கள் உள்ளனரா என்பது தொடர்பான விசாரணைகள், உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.ஜி.எச். பிரசாந்தவின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சந்தேகநபர் மற்றும் பொருட்கள் மிரிஹான விசேட குற்ற விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சந்தேகநபரை இன்று கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.



No comments:
Post a Comment