ஒகஸ்ட் 11ஆம் திகதி இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின், தேசிய மாநாட்டைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு குழுவினர் தங்களுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா ஆபேவர்த்தன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “நான் இவ்வேளையில் ஒரு கருத்தை உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதாவது, ஒகஸ்ட் 11ஆம் திகதிக்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தலைமையிலான குழுவொன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொள்ளவுள்ளது.
இதுதொடர்பான பேச்சுக்களும் தற்போது இடம்பெற்று வருகின்றன. அரசாங்கத்துக்கு எதிரான பலமான அணியொன்று உருவாகுமானால், அதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிச்சயமாக இணைந்துகொள்ள வேண்டும். அப்படியில்லாவிட்டால், ஒகஸ்ட் 11ஆம் திகதி எமது மேடையில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள்கூட இருக்க வாய்ப்புள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தற்போது ஜனாதிபதி அந்தஸ்த்து என்ற வேகமான வாகனமொன்று தனக்கு வேண்டும் என்று கூறிவருகிறார்.
ஆனால், தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ள வாகனத்தை வைத்துக்கொண்டே, இந்த நாட்டில் எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள். இதனால், இவரை விலக்க வேண்டும் என்றுதான், அவருடைய கட்சியினர்கூட நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல பலமான தலைமைத்துவமொன்று அவசியமாகும்.
எமது தரப்பிலிருந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டுள்ளதே ஒழிய, இன்னும் இதுதொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை” என மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment