உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதான 161 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 167 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 99 பேர் சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ளனர். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய இவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பிரதமர் கேள்வி நேரத்தின் போது எஸ்.எம்.மரிக்கார் எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தற்கொலை தாக்குதல் மற்றும் இனவாத தாக்குதல்களால் சேதமடைந்த மதஸ்தலங்கள், வியாபார நிலையங்களுக்கு அடுத்த வாரம் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பதிலளித்த பிரதமர், தடுப்புக்காவலிலும் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புள்ள சந்தேகநபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் கைதான நபர்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைப் பிரகாரம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
குளியாப்பிடி, ஹெட்டிபொல தாக்குதல் சம்பவங்களில் 39 பேர் கைதாகியுள்ளனர். இவர்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் விளக்கமளித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவற்றுக்கு உதவி வழங்கியோர் தொடர்பாகவும் விசாரணைகள் நடைபெறுகின்றன. தவறு செய்தோருக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றார்.
ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்
No comments:
Post a Comment