இப்புனித நாள் நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் மன நிம்மதியையும் சந்தோஷத்தையும் வாழ்வில் அபிவிருத்தியையும் கொண்டு வரவேண்டுமென பிரார்த்திக்கின்றேன் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் விடுத்துள்ள நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இப்புனித நாள் நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் மன நிம்மதியையும் சந்தோஷத்தையும் வாழ்வில் அபிவிருத்தியையும் கொண்டு வரவேண்டுமென பிரார்த்திக்கின்றேன். ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடும் எனது இனிய இஸ்லாமிய சகோதரர்களுக்கும் உறவினர்களுக்கும் அன்பர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த பெருநாள் வாழ்த்துக்கள். ஈத் முபாரக் -
கடந்த நிகழ்வுகளும் கடந்துபோன ரமழானும் நமக்கு நிறையவே படிப்பினைகளை தந்திருக்கின்றன. இந்த நாட்டில் நாம் இரண்டாம் தர பிரஜைகளல்ல என்பதை உரத்து சொல்லும்படி உணர்த்துவது போலவே இம்முறை ஷவ்வால் பிறையும் நம் கண்களுக்கு தெரிகிறது. இறைத்தூதர் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் தான் எமக்கு தலைவர். சமுக நலனுக்காக நாம் பயணிக்கும் எந்த கட்சியும் எந்த அமைப்பும் எந்த இயக்கமும் சமுக நலனை பாதிக்கும் போது காத்திரமான முடிவெடுக்க எவரும் எமக்கு தடையாக முடியாது.
அல்குர்ஆன் எமது வாழ்க்கை வழிகாட்டி என்ற நிலையை எவருக்காகவும் நாம் விட்டுக்கொடுக்கவும் மாட்டோம். மனிதத்தை வாழ வைக்கும் நீதியை நிலைநாட்டும் சகவாழ்வுக்கான போராட்டமே எம் வழிமுறை. எல்லாவற்றுக்கும் மேலாக இறைதிருப்தியே எமது இலக்காக இருக்கின்றது. இந்த உறுதியோடு இன்று எம்மை அச்சுறுத்தும் அசாதாரண சூழல், மனித உரிமை மீறல்கள், மத துவேஷங்கள், அத்துமீறல்கள் அனைத்தும் நீங்கி நம் நாடு எழுச்சி பெற இப்புனித நாளில் அல்லாஹ்வைப் பிரார்த்திகின்றேன்.
அந்த மாற்றத்துக்கு அடிப்படையான ஒற்றுமை சகோதரத்துவம் மனிதாபிமானம் நற்பண்பாடு அனைத்தும் நம்மில் அமையவும் நம்மைப் பற்றிய ஓரக்கண் பார்வையாளர்களின் எண்ணெங்கள் மாறவும் இப்புனித பெருநாள் காரணமாக இருக்கவேண்டுமென இரு கரம் ஏந்தி பிரார்த்திகின்றேன். அல்லாஹ் நம் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக. நம் நற்காரியங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வானாக.
No comments:
Post a Comment