வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள பட்டதாரிகளை ஏனைய பிரதேசத்தில் உள்ளவர்களுடன் ஒப்பிடாது நியமனம் வழங்க வேண்டும். நாங்கள் யுத்தத்திற்கு முகம் கொடுத்த மாகாணங்கள் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கின்றோம் என்ற வகையில் விகிதாசாரத்திலோ விசேட கவனம் செலுத்தி நியமனங்களை வழங்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருகோணமலை இந்துக்கலாசார மண்டபத்தில் வியாழக்கிழமை (27) மாலை நடைபெற்ற நீண்ட காலம் தொண்டராசிரியர்களாகப் பணியாற்றியவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்து அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றுகையில், எங்களுடைய தொண்டராசிரியர்கள் தங்களது நியமனத்தினைப் பெற்றுக் கொள்வதற்கு எவ்வாறு போராடினார்கள் என்று அவர்களுக்குத்தான் தெரியும். கடந்த காலங்களில் ஒரு அரசியல் அனர்த்தம் காரணமாக நாங்கள் 52 நாட்கள் அலரி மாளிகையிலே மீண்டும் இந்த ஆட்சியைக் கொண்டு வருவதற்காக எப்படிப் போராடினோம் எப்படி மறுபிறவி எடுத்தோமோ அதே போன்று மறு பிறவி எடுத்துத்தான் இந்தத் தொண்டராசிரியர்களும் நியமனங்களைப் பெற்றிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
உண்மையில் எங்களுடைய இந்தத் தொண்டராசிரியர்கள் 15 வருடங்களுக்குப் பின்னர் இந்த நியமனங்களைப் பெறுகின்றார்கள். இவர்கள் கடந்த காலங்களில் யுத்தத்திற்கு முன்னர், யுத்தத்துக்குப் பின்னர் எந்தவித வேதனமுமின்றி தங்களுடைய குடும்பங்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து தங்களுடைய கடமைகளைச் செய்து வருகிறார்கள்.
இவர்களுக்காக எங்களுடைய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வடக்கு மாகாணத்தில் இரண்டு தடவைகள் நியமனத்தை வழங்கியிருக்கிறது. இந்த நியமனத்தை வழங்குவதில் எங்களுடைய கல்வி அமைச்சர் யாழ் மாவட்ட இந்துக் கல்லூரிக்கு வருகை தந்திருந்த வேளை அவர்களைச் சந்திப்பதற்கு முழு அனுசரனையை வழங்கிக் கொடுத்ததன் பின்னர் இரண்டு தடவைகள் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் அதற்காக கல்வி அமைச்சர் அகிலரவிராஜ் காரியவசம் மற்றும் பிரதமர் அவர்களுக்கும் அதே போல கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர், அதிகாரிகளுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன் என்றும் கூறினார்.
கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் போராடிய தொண்டராசிரியர்கள் 811 பேரில் 739 பேர் நியமனங்களைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் விடுபட்டிருந்தவர்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளார்கள். வட மாகாணத்தில் இருந்து 350 ஆசிரியர்கள் நியமனம் பெற்றிருக்கிறார்கள்.
வடக்குக் கிழக்கு மாகாணங்களில் அனைத்துப் பாடசாலைகளிலும் அபிவிருத்திகளைக் கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டங்களில் தான் கடந்த மார்ச் மாதத்தில் குறைந்தது 200 பாடசாலைகளில் நாங்கள் கட்டிடங்களைத் திறந்து வைத்திருக்கிறோம். அடுத்த மாதத்தில் 250 பாடசாலைகளின் கட்டிடங்களைத் திறந்து வைக்க இருக்கின்றோம்.
இதேபோல வடக்கு, கிழக்கு, மலையகம் போன்ற பிரதேசங்களில் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலைத் திட்டத்தின் கீழ், வடக்குக்கு 5000 மில்லியன் ரூபாவையும், கிழக்கு மாகாணத்தில் 6500 மில்லியன் ரூபாவினையும், செலவிட்டு வருகின்றோம்.
நிதி ரீதியாகவும், அபிவிருத்தி ரீதியாகவும் நாடளாவிய ரீதியிலும், வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் எங்களுடைய மாணவர்களின் கல்வி நிலையில் அபிவிருத்தியை முன்னேற்றும் வகையில்தான் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகத்தான் 1119 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் காலங்களில் அதே போன்று பிரதமர் செயலகத்தின் ஊடாக தேசிய கொள்கை அமைச்சின் ஊடாக கிட்டத்தட்ட 7500 நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியை வழங்கியிருக்கிறது.
அந்த அமைச்சரவைப் பத்திரத்தில் வடக்குக் கிழக்கு, மலையகத்தில் இருக்கின்ற இளைஞர் யுவதிகளை விகிதாசாரத்திலோ எண்ணிக்கையிலோ கூடுதலான வேலை வாய்ப்புக்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை பிரதமரின் கவனத்திற்குக் கொண்டவர விரும்புகிறேன் எனவும் சுட்டடிக்காட்டினார்.
இன்று எவ்வாறு மறு பிறவி எடுத்து தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கியிருக்கிறோம். அதே போல எங்களுடைய எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற பட்டதாரிகள் இருக்கின்றார்கள்.
இந்த வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள பட்டதாரிகளை ஏனைய பிரதேசத்தில் உள்ளவர்களுடன் ஒப்பிடாது நாங்கள் யுத்தத்திற்கு முகம் கொடுத்த மாகாணங்கள் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கின்றோம் என்ற வகையில் விகிதாசாரத்திலோ விசேட கவனம் செலுத்தியோ கூடுதலான பட்டதாரிகளை உள் வாங்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment