புலிகளிள் மீள் எழுச்சி குறித்து மட்டுமன்றி சர்வதேச பயங்கரவாதச் செயற்பாடுகள் குறித்தும் இனங்கண்டிருந்தோம் - கோட்டா - News View

About Us

About Us

Breaking

Sunday, May 12, 2019

புலிகளிள் மீள் எழுச்சி குறித்து மட்டுமன்றி சர்வதேச பயங்கரவாதச் செயற்பாடுகள் குறித்தும் இனங்கண்டிருந்தோம் - கோட்டா

விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி குறித்து மட்டுமல்லாது, சர்வதேச பயங்கரவாதச் செயற்பாடுகளையும் கடந்த அரசாங்கம் இனங்கண்டிருந்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

எனினும், இது தொடர்பிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் உரிய வகையில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தினார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “பயங்கரவாதச் செயற்பாடுகள் குறித்து எமது காலத்தில் சிறந்தவொரு ஒருங்கிணைப்பொன்று இருந்து வந்தது. தொடர்பாடல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சிறப்பான வழியில் முன்னெடுக்கப்பட்டன.

இதுமட்டுமல்லாது அனைத்து கட்டமைப்புக்களும் அன்று பலமாக இருந்தமையாலேயே எம்மால் அன்று விடுதலைப் புலிகளை கட்டுப்படுத்த முடியுமாக இருந்தது.

அதேபோல், பயங்கரவாதம் தொடர்பிலும் நாம் அன்று மிகவும் அவதானத்துடனேயே செயற்பட்டோம். இது குறித்த நடவடிக்கைகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பலப்படுத்த, விசேட அதிகாரியொருவரை நாம் அமெரிக்காவுக்கு பயிற்சிகளுக்காக அனுப்பியிருந்தோம். 

அவர் இதற்கான பயிற்சிகளை முடித்துக்கொண்டு நாடு திரும்பியவுடன், அவரை புலனாய்வு துறையின் தலைவராக நியமித்து முக்கியமான பொறுப்புக்களை ஒப்படைத்தேன்.

தேசியம் மற்றும் சர்வதேச ரீதியாக பயங்கரவாதத்தை கண்காணிக்கும் பொறுப்பே அவருக்கு பிரதானமாக வழங்கப்பட்டிருந்தது.

கணினி உள்ளிட்ட அதியுச்ச தொழில்நுட்ப சாதனங்கள் மட்டுமன்றி, அரபு மொழி தேர்ச்சி பெற்ற அதிகாரிகளையும் அன்று எமது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நியமித்திருந்தோம்.

இவ்வாறு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரும் இலங்கையின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் நாம் கூடிய அக்கறையுடனேயே செயற்பட்டுவந்தோம்.

எனினும், 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த செயற்பாடுகள் தொடரவில்லை என்றே குறிப்பிட வேண்டும். பயங்கரவாதச் செயற்பாடுகளை கண்காணிப்பது குறித்து தேர்ச்சி பெற்ற அதிகாரிகள், இந்த அரசாங்கத்தினரால் வெளியேற்றப்பட்டனர். இதனால், பயங்கரவாதத்தை கண்காணிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.

தற்போதுள்ளவர்கள், புலிகளின் மீள் எழுச்சி குறித்து அதிக அக்கறை செலுத்தினார்களே தவிற, சர்வதேச பயங்கரவாதம் குறித்து பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதன் பாரதூரத்தை இவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை. இதனாலேயே இவ்வளவு விளைவுகள் ஏற்பட்டுள்ளன. 

நாம் புலிகளிள் மீள் எழுச்சி குறித்து மட்டுமன்றி சர்வதேச பயங்கரவாதச் செயற்பாடுகளையும் இனங்கண்டிருந்தோம்” என மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment