விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட காட்டு மரங்கள் மற்றும் மாட்டு வண்டிகள் கைப்பற்றப்பட்டன - News View

About Us

About Us

Breaking

Sunday, May 12, 2019

விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட காட்டு மரங்கள் மற்றும் மாட்டு வண்டிகள் கைப்பற்றப்பட்டன

எஸ்.எம்.எம்.முர்ஷித்
கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வடமுனை காட்டுப் பகுதியில் சட்ட விரோதமான முறையில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட காட்டு மரங்கள் மற்றும் மாட்டு வண்டிகளை கைப்பற்றியுள்ளதுடன், அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை வட்டார வன அதிகாரி சு.தணிகாசலம் தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்தில் காட்டு மரங்கள் வெட்டப்படுவதாக தமக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் தமது அலுவலக உத்தியோகஸ்த்தர்கள் பிரதேசத்திற்கு சென்று களப் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போது மாட்டு வண்டில்களில் மரங்கள் சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்படுவதனை கண்டு அவற்றினை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தார்.

இதன்போது சந்தேக நபர்கள் இருவர் தப்பி ஓடியுள்ளதாகவும், முதிரை, ராணை போன்ற பெறுமதி வாய்ந்த மரங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட பெருட்கள் அனைத்தும் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிபதி எம்.எச்.எம்.பஸில் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

இதன்போது குறித்த வழக்கு தொடர்பான சாட்சியங்களை கேட்டறிந்து கொண்ட நீதிபதி சந்தேக நபர்கள் ஆறு பேருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும், மரம் கடத்துவதற்கு பயன்படுத்திய மாடுகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் படி ஆறு இலட்சம் காசுப் பிணையில் விடுதலை செய்யுமாறு கட்டளை பிறப்பித்தார்.

கடத்தி வரப்பட்ட மரங்கள் மற்றும் அதற்கு பயன்படுத்திய மாட்டு வண்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட மரங்கள் சுமார் ஐந்து இலட்சம் பெறுமதிவாய்ந்ததாகவும் வாழைச்சேனை வட்டார வன அதிகாரி சு.தணிகாசலம் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment