தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக புலனாய்வு பிரிவினரின் தகவல்களைக் கோருவது நாட்டின் தேசிய பாதுகாப்பை பாதிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தங்காலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தற்போதைய நாட்டின் நிலவரங்கள் தொடர்பாக தாங்கலையில் தொடர்ந்தும் விளக்கமளித்த மஹிந்த ராஜபக்ஷ, புலனாய்வு கட்டமைப்பு தொடர்பிலான செயற்பாடுகள் தொடர்பாக தனது அதிருப்தியை வெளியிட்டார்.
தகவலை வழங்கும் புலனாய்வு முகவர் அமைப்புக்களை ஒரே கட்டமைப்புக்குள் கொண்டுவர வேண்டும் எனவும், இவற்றினையே அனைத்து நாடுகளும் மேற்கொள்வதாகவும் தற்போதுள்ள அரசாங்கமும் இவ்வற்றினை கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.
பொதுமக்களின் தேசிய பாதுகாப்பைப் பற்றிய முக்கியமான தகவலை வெளிப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு முன்னரும் பின்னரும் இடம்பெற்ற நிலைமைகளினால் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் மிலேனியம் சிற்றி தொடர்பான விடயங்கள் வெளியாகியமையினால் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் புலிகளினால் கொல்லப்பட்டனர் என்றும் இதில் ஒருவர் மாத்திரம் நாட்டை விட்டு வெளியியேறியிருந்தமையினால் தப்பிவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் புலனாய்வார்கள் விடயம் தொடர்பாக நாம் கூடுதல் கவனமாக இருக்கவேண்டும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாட்டில் தற்போது நிலைமை 99 சதவிகிதம் நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டாலும் ஒரு சதவீதம் விடுபட்டுள்ளது என சுட்டிக்காட்டிய அவர் அந்த ஒரு சதவீதத்தை பற்றியே தற்போது தமக்கு கவலைகள் உள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment