சமூக பொறுப்புக்கூறல் இலங்கையில் சரியாக இடம்பெறுகின்றதா? - News View

About Us

About Us

Breaking

Sunday, May 12, 2019

சமூக பொறுப்புக்கூறல் இலங்கையில் சரியாக இடம்பெறுகின்றதா?

ஜனநாயக அரசியல் என்பதன் அடிப்படைக் கொள்கைத் தத்துவமானது மக்கள் தங்களை தாங்களாகவே ஆட்சி செய்யும் முறையாகும். மக்கள் தங்கள் சார்பில் ஆட்சி செய்வதற்கு தங்களது பிரதிநிதிகளை தாங்களே தெரிவு செய்கின்றார்கள். இது எமது நாட்டின் அதியுயர் ஜனாதிபதி பதவி, பாராளுமன்ற உறுப்பினர் பதவி, பிரதேச சபை உறுப்பினர்கள் வரை சகலரும் மக்களினால் தெரிவு செயயப்படுகிறார்கள். 

இத்தெரிவு முறைமைக்காக தேர்தல்கள் நடாத்தப்படுவதும் ஜனநாயகப்பண்பாகும். மக்களினால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் நாட்டின் நிர்வாகத்திற்கும் அபிவிருத்திக்கும் மற்றும் நாட்டின் சட்டம், ஒழுங்கு பேணுவதற்கான தீரமானங்களை எடுப்பதற்கும், மக்களின் பொறுப்புக்கூறல் நாட்டின் மக்களின் பாதுகாப்பு மற்றும் இருப்பு போன்ற விடயங்களை கவனிப்பதற்கும் இப்பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகின்றார்கள்.

இன்று எமது நாட்டின் ஜனாதிபதி தொடக்கம் பாராளுமன்று பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள் வரை இந்நாட்டு மக்களின் பொறுப்புக்கூறலிருந்து விலகி நடப்பதனை காணமுடிகிறது. இந்நாட்டு மக்களுக்கு ஏற்படும் துன்பியல் சம்பவங்களுக்கு கூட விடையாக தனக்கு தெரியாது என்று கூறுவது சிறுபிள்ளைத்தனமாக செயலாக உள்ளது. 

ஒரு வீட்டுக்குள் விவாவகரத்து பெற்ற கணவன் மனைவியை போல் இந்நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் மாறி மாறி இந்நாட்டில் அண்மையில் ஏற்பட்ட தீவிரவாத தொடர் குண்டு தாக்குதல்கள் தொடர்பாக முன்கூட்டி வழங்கப்பட்ட புலனாய்வு அறிக்கைவிடையத்தில் தனக்கு தெரியாது என்று கூறுவது இந்நாட்டு மக்களை ஒரு குழியில் வெட்டி புதைப்பதற்கு சமமானது.

அரசியல்வாதிகள், சேவை வழங்குனர்கள், பொது நிர்வாகிகள் எல்லோரையும் மக்களின் சேவை வழங்குதலில், உரிமைகளை பாதுகாப்பதில், நலன்களைப் பேணுவதில் குறைகள் இருப்பின் அவற்றை மக்களுக்கு பதில் கூற வைக்கும் நடவடிக்கையினை சமூக பொறுப்புக் கூறல் எனலாம். இலங்கையில் தேர்தல்கள் காலங்களில் மட்டும் ஒரு வகையான சமூக பொறுப்புக்கூறல் இருக்கவே செய்கின்றது. 

ஆனால் ஆட்சிக்காலப்பகுதியில் அது கேள்விக் குறியாக்கப்படுகிறது. சில அரசியல்வாதிகள் தங்களது ஜந்து வருட காலத்தில் மக்களுக்கு அநீதிகளை விளைவித்து லஞ்சம், ஊழல் செய்து விட்டு எதிர்காலத் தலைமுறைகளுக்கு தீமைகளை விளைவித்து விட்டு தேர்தல் காலத்தில் மாத்திரம் தன்னை மாற்றம் செய்வது எந்த விதத்தில் பயனுடைய செயலாக அமையும்.

அரசியல்வாதிகள் பதவியில் இருக்கும் போது அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பதில் கூறகடப்பாடுடையவர்கள் அவர்கள் பொறுப்புக்கூற வைக்கப்பட வேண்டும் மற்றும் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பாக கணக்கு காட்ட வேண்டும். மக்கள் இது தொடர்பாக தற்போதுள்ள தகவல் அறியும் சட்டத்தை இதற்காக நன்கு பயன்படுத்த வேண்டும். 

இதற்கு தீர்மானம் எடுப்போரை இயங்க வைப்பதற்கு ஊடகங்களையும் மக்கள் துணிந்து பயன்படுத்த வேண்டும். ஊடகத்துறையானது மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக பதில்கூற வைக்கும் ஒரு பக்கத்தினையாவது பத்திரிகைகளில் ஒதுக்க வேண்டும். ஊடகவியலாளர்கள் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் சமூக பொறுப்புக்கூறலை மேற்கொள்வதற்கான மக்களின் விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

மேலும் அரசியல்வாதிகளின் பொறுப்புக்கூறலில் சாதாரண அடிமட்ட மக்களிலிருந்து இப்பங்களிப்பு எதிர்பாரக்கப்படுகின்றது. எனினும் தற்கால நடைமுறையில் அவதானிக்கும் போது குறிப்பிட்ட அரசியல் கட்சிகளில் இருந்து ஒருவர் பாராளுமன்றம் சென்றுவிட்டால் அக்கட்சி தொண்டர்கள் ஆதரவாளர்களுக்கு மட்டும் வாழ்வாதாரம், ஏனைய உதவிகளை வழங்குவதனால் ஏனைய கட்சி ஆதரவாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

ஏன் கோழிக்குஞ்சைக்கூட எதிர்க்கட்சிக்காரனுக்கு செல்லக்கூடாது என்ற மனநிலை காணப்படுகின்றது. தனது கட்சிக்காரனுக்கு ஒரு கண் போனால் எதிர் கட்சிக்காரனுக்கு இரண்டு கண்கள் போக வேண்டும் என்ற மனநிலை சமூக பொறுப்புக் கூறலில் மிகவும் மோசமான நிலையாகும். இவற்றுக்கு அரச அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது மனவேதனை அளிக்கின்றது. 

உண்மையில் கட்சி என்பது தேர்தல் கால சிருஸ்டிகள் என வரையறை செய்யப்படுகிறது. அரசாங்கமானது அரசின் செயற்பாடுகளை பாதுகாக்கின்ற மக்களை பாதுகாக்கின்ற நிலையான காவல் அரண்களாகும். இத்தத்துவங்களை புறக்கனிக்கும் நிலை இலங்கையில் காணப்படுகிறது. இதுவே தேசிய பாதுகாப்பிலும் உறுதியற்ற நிலைக்கு இன்று இலங்கையை தள்ளிவிட்டுள்ளது. 

சமூக பொறுப்கூறலானது ஒரு பொறிமுறை கட்டமாக உருவாக்கப்பட வேண்டும். அதாவது கிராம சேவகர் மட்டத்திலிருந்து பிரதேச செயலாளர் மட்டம், மாவட்ட மட்டம், மாகாண மட்டம், தேசிய மட்டம் வரை இப்பொறிமுறையானது சீர்திருத்தப்பட வேண்டும். அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பொதுமக்களோடு இவ்விடயத்தில் இணைந்து செயற்பட வேண்டும். 

வட்டார அரசியலில் இருந்தே அவ்வட்டாரத்தின் அவசியத் தேவைகளையும் எதிர்கால தேவைகளையும் உள்ளடக்கியதாக ஒரு வருட திட்டத்தினை தயாரித்து நடைமுறைப்படுத்தல் வேண்டும்.

ஆனால் இன்று பிரதேச செயலக மட்டத்தில் அப்பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதாரவாளர்களை பெருன்பான்மையாக இணைத்தே இச்செயற்பாடுகள் இடம்பெறுவதனை அவதானிக்க முடிக்கின்றது. இவ்வாறு செயற்படுத்தும் செயற்றிட்டம் மக்களுக்கு பரிபூரணமாக பயனிக்கின்றதா என்பதனை ஒரு பொதுமக்கள் குழு பரசீலனை செய்ய வேண்டும். 

இதனூடாக எதிர்காலத்தில் மேலும் திறம்பட செயற்படுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியும். வாசிகசாலை, வைத்தியசாலை மற்றும் பொது இடங்களை எவ்வாறு பயன்படுத்துக்கின்றார்கள் என்பதனை மீள்பரிசிலனை செய்ய வேண்டும்.

இன்று சகல பிரதேச செயலகங்களிலும் பிரதேச சபைகளிலும் அமைச்சுகளிலும் காணக்கூடியதாக உள்ள விடயம் பிரசைகள் சமவாயம் என்ற அம்சமாகும். இது பொதுச்சேவைகளை பெறுவதற்காக உரிமைகளை வரிசைப்படுத்தி காட்டும் ஒரு குறிப்பிட்ட சேவையை என்ன தரத்தில் என்ன விலையில் வழங்கலாம் என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது. 

மற்றும் இச்சமூக பொறுப்புக் கூறலில மக்களுக்கு மிக முக்கியமான விடயமாக பார்க்கப்படுவது தீர்மானம் எடுப்போரை பிரசைகள் ஒரே இடத்திற்கு கொண்டு வந்து ஒரு குறை கேள் நிகழ்வை ஏற்பாடு செய்வதாகும். இந்நிகழ்வில் பொதுமக்கள் சகலரும் அனுமதிக்கப்பட்டு அப்பிரதேச மக்களின் கவலைகளும் அனுபவங்களையும் தெரியப்படுத்தி மக்களின் பிரச்சினையான விடயங்களுக்கு தீர்வுகாண முயல வேண்டும்.

அத்துடன், மக்களின் வரிப்பணத்திலிருந்து செயற்படுத்தும் செயற்றிட்டத்தின் பணிகள் கணக்காய்வு செய்வதற்கு மக்களுக்கு அனுமளிக்கப்படல் வேண்டும். சகல பிரதேச செயலகம், பிரதேச சபைகள் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் செய்யும் தமது பணிகளுக்கான கணக்கு காட்டுதல் அவசியமாகின்றது. இதற்கும் தற்போதுள்ள தகவல் அறியும் சட்டத்தினை மக்கள் பயன்படுத்த வேண்டும்.

அண்மையில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் அரசியல் கட்சிகள் தத்தமது அரசியல் இலாபங்களை ஈட்டுவதற்காக பாராளுமன்றங்களில் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப வசைபாடியதே ஒழிய தாங்கள் ஒன்றிணைந்து இவ்வாறான உள்நாட்டு சர்வதேச பயங்கரவாத செயற்பாடுகளை எவ்வாறு ஒழிப்பது என்ற ஒட்டு மொத்தமான தீர்மானத்திற்கு வரவில்லை. அதாவது தத்தமது சமூக பொறுப்புக்கூறலில் இருந்து விலகி நடப்பதனையே அவதானிக்க முடிகிறது. 

இந்நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு என்று ஒரு தனியான பிரிவு இருக்க வேண்டும். அது இத்தேசியத்தை மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த தொடர்ச்சியாக செயல்படுத்த வேண்டும். அத்தேசிய பாதுகாப்பானது அரசியல்வாதிகளின் கைக்கூலியாக மாறி விடக்கூடாது. தேசிய பாதுகாப்பு சபையானது கால காலமாக மக்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை நேரடியாக வழங்க வேண்டும் அதாவது வருமுன் காப்பதே சிறந்தது. 

அரசியல் தலைமைகள் ஒரு பயங்கரவாத தாக்குதல்கள் நடக்க போகின்றது என்று முன்கூட்டி தெரிந்திருந்தும் கூட அதனை தடுக்காமல் விட்டு விட்டு ஆயிரக்கணக்கான உயிர் இழப்புகள், உடமைகள் பொருளாதாரம் இவற்றை இழந்து ஏன் நாட்டையே அதாள பாதாளத்துக்கு தள்ளிவிட்டு ஊடகங்களுக்கு வந்து சமூக பொறுப்புக்கூறலை சொல்வது இந்நாட்டின் ஜனாநாயகத்திற்க்கு சாவுமணி அடிப்பது போலாகும்.

உலக நாடுகளை நாம் நோக்கும் போது அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்களில் அமெரிக்காவின் சகல அரசியல் கட்சிகளும் பயங்கரவாதத்தினை ஒழிப்பதற்கு ஒரே குரலில் நின்றன. அதேபோன்று காஸ்மீரில் இராணுவத்தினர் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட போது இந்தியாவிலுள்ள சகல அரசியல் கட்சிகளும் ஒன்றாக நின்று அவற்றை முறியடிப்பதற்காக நின்றன. அவர்களுடைய நோக்கம் மக்களை பாதுகாப்பதாக இருந்தது. அந்நாட்டு அரசியல்வாதிகள் தமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இருந்தார்கள். ஆனால் இலங்கையின் நிலை கவலைக்கிடமானது.

இன்று இலங்கை பிரச்சினையை நோக்கிய அரசியலை நோக்கி நகர்கிறது. ஒரு தீர்வை நோக்கிய அரசியலாக காணப்படவில்லை. இந்நாட்டு மக்கள் தொடர்ந்தும் அடுத்த தேர்தல்கள் வரும் வரை பீதியுடன் வாழ வேண்டும் என்ற எதிர்பார்க்கையின் காரணமாக இந்தப் பொறுபபுக்கூறலை மாறி மாறி குற்றம் காணுகின்ற அரசியல்வாதிகள் எம்மிடையே இருக்கின்ற நிலைக்கு இலங்கையர் உள்ளகியுள்ளனர். 

எமது நாட்டில் இருக்கின்ற அரசியல் கட்சிகள் தமது அரசியல் கட்சியின் கொள்கைகளை விடுத்து எமது தாய் நாட்டின் மீது பற்று வைத்து இந்த பயங்கரவாத ஒழிப்புக்கான சமூக பொறுப்புக்கூறலை செய்வதற்கு முன்வர வேண்டும். சமூக பொறுப்புக்கூறல் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு மாத்திரம் அல்ல அது அரச, அரச சார்பற்ற சகல நடவடிக்கைகளிலும் சமூக பொறுப்புக் கூறல்களை செய்ய வேண்டும். 

இச்சமூக பொறுப்புக்கூறல் இலங்கையில் சரியாக இடம்பெறுவதற்கு மக்கள் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கான இடம் ஒதுக்கப்பட்டு அதற்கான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறை பின்பற்றப்படுகின்றதோ அன்று இச்சமூக பொறுப்புக் கூறலை இலங்கையில் உறுதி செய்யலாம் இதற்காக எமது நாட்டு அரசியல் யாப்பு மாற்றங்களை வேண்டி நிற்கின்றது.

ஓட்டமாவடி நிருபர் அ.ச.மு சதீக்

No comments:

Post a Comment