மன்னாரில் நிலவும் மத ரீதியான பிளவுகளைக் கண்டித்து சர்வமத மக்களின் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (10) அமைதியான முறையில் இடம்பெற்றது.
'மதங்களைக் கடந்த மனிதத்தை நேசிப்போம்' எனும் தொனிப் பொருளில், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் மன்னார், மடு, மாந்தை, முசலி, நானாட்டான் ஆகிய இடங்களைச் சேர்ந்த சர்வ மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 500 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அண்மைக்காலமாக மன்னாரில் நிலவிவரும் மத ரீதியான பிணக்குகள் இனிமேலும் வேண்டாம் என்பதோடு, மதம் எனும் அடையாளத்திற்காக எமது உரிமைக்காக நாம் சண்டையிட்டு பிரியக்கூடாது எனவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்தனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் கருத்துத் தெரிவிக்கையில், 'மத ரீதியான பிரச்சினைகள் எல்லா இடங்களிலும் ஏற்படுவது உண்டு. ஆகையால், ஆண்டாண்டு காலமாகக் கட்டியெழுப்பப்பட்டுவரும் எமது ஒற்றுமையானது, மத ரீதியான காரணங்களுக்காகத் தகர்க்கப்படக்கூடாது.
மத ரீதியான பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில், மதம் சார்ந்தவர்களினால் கலந்துரையாடித் தீர்க்க முடியும். அல்லாவிடின், நீதிமன்றம் ஊடாகத் தீர்க்க முடியும். அதை விடுத்து, அப்பிரச்சினையை அடையாளப்படுத்தி மன்னார் மாவட்டத்தை பிரித்து விடாதீர்கள்' என்றனர்.
றொசேரியன் லம்பேர்ட்
No comments:
Post a Comment