மொரகஹகந்த – களுகங்கை பாரிய நீர்ப்பாசன திட்டத்துடன் ரஜரட்ட பிரதேச விவசாயத்துறையில் புதியதோர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள விவசாய சமூகத்தினருக்கும் அத்திட்டத்தின் நன்மைகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டம் விரைவுபடுத்தப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இன்று (10) முற்பகல் பொலன்னறுவை வரலாற்று முக்கியத்துவமிக்க கல்விகாரையில் இடம்பெற்ற புத்தரிசி விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
எமது கலாசாரத்திற்கும் விவசாயத்துறைக்கும் இடையிலுள்ள உறவை எடுத்துக்காட்டும் புத்தரிசி விழா பாரம்பரியத்தை பொலன்னறுவை விவசாய சமூகத்தினரும் இன்று கோலாகலமாக நிறைவேற்றினர்.
புத்தரிசி விழா பாரம்பரியத்தை ஆரம்பித்து பொலன்னறுவை கல்விகாரை புத்தர் சிலையின் அருகில் பாற்சோறு பூஜையை மேற்கொண்ட ஜனாதிபதி சமய கிரியைகளிலும் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின் விவசாயத் துறையினரின் வாழக்கைத்தரத்தை உயர்த்துவதற்காக அன்று முதல் அர்ப்பணிப்புடன் செயற்படும் நான், ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாட்டின் விவசாய துறையினதும் விவசாய சமூகத்தினரினதும் நன்மைக்காக மேற்கொள்ள வேண்டிய தேவையான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு ஒருபோதும் பின்நிற்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க தேரர் சங்கைக்குரிய வெண்டருவே உபாலி நாயக்க தேரரின் ஆலோசனையின் பேரில் புத்தரிசி விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொலன்னறுவை இசிபத்தானாராமாதிபதி வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களின் பிரதான சங்கநாயக்க தேரர் உடகம ஸ்ரீ தம்மானந்த நாயக்க தேரர் உள்ளிட்ட பிரதேச மகாசங்கத்தினரும் அமைச்சர்களான வஜிர அபேவர்த்தன, வசந்த சேனாநாயக்க, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, வடமேல் மாகாண ஆளுநர் பேஷல ஜனரத்ன, பொலன்னறுவை பிரதேச தலைவர் பிரேமசிறி முனசிங்ஹ ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment