அதல பாதாளத்தை நோக்கி வடக்கு, கிழக்கு கல்வித் தரம் - க.பொ.த (சா.த) அதிர்ச்சி தரும் பெறுபேறுகள்! - News View

About Us

About Us

Breaking

Monday, April 1, 2019

அதல பாதாளத்தை நோக்கி வடக்கு, கிழக்கு கல்வித் தரம் - க.பொ.த (சா.த) அதிர்ச்சி தரும் பெறுபேறுகள்!

இலங்கையின் கல்வியில், குறிப்பாக பொதுத் தேர்வுகளில் அண்மைக் காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பின்னடைவில் இருப்பதாக புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டி வந்தன. அதனை மேலும் மெய்ப்பிக்கும் வகையில் கடந்த வியாழக்கிழமையன்று வெளியாகிய க.பொ.த (சா.த) பெறுபேறுகளும் ஆதாரமாக மாறியுள்ளன.

கடந்த டிசெம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரத் தேர்வுப் பெறுபேறு இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் உரிய தினத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் மோசமான பெறுபேறுகளைப் பெற்றுள்ளன.

ஒரு காலத்தில் இலங்கையில் கல்வியில் கொடிகட்டிப் பறந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இன்று அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ளன.

கல்வியில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இறுதி நிலையில் இருப்பதற்கான காரணங்களை ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் சொல்கிறார்கள்.

காரணங்களும் குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டு வருகின்றனவே தவிர, அதனை நிவர்த்தி செய்வதற்கான ஆக்கபூர்வமான ஆய்வுகளை மேற்கொள்ளவோ கருத்துக்களைத் தெரிவிக்கவோ யாரும் முன்வருவதாக இல்லை. இந்நிலை தொடர்ந்தால் நிலைமை மேலும் மோசமாகலாம்.

எனவே மாகாண ஆளுநர்கள் முதல் அங்கிருக்கக் கூடிய கல்வியியலாளர்கள் வரை இது விடயத்தில் விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இம்முறை வெளியான சா.த. பரீட்சைப் பெறுபேறுகள் சுட்டிக்காட்டி நிற்கின்றன. வடக்கு, கிழக்கில் இருக்கின்ற பல்கலைக்கழகங்களும் இது தொடர்பான ஆய்வுகளைச் செய்ய வேண்டும். குறிப்பாக கல்விப் பீடங்களைக் கொண்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இதுவிடயத்தில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாய தார்மீக கடமையுண்டு.

வடக்கு, கிழக்கு ஆளுநர்கள் உடனடியாகச் செயற்பட்டு இம்மாகாணங்களில் ஏற்கனவே இருந்த கல்வித்துறை உயரதிகாரிகள் (உதாரணம் சுந்தரம் டிவகலாலா), பல்கலைக்கழக கல்வியியலாளர்கள், ஆராய்ச்சியாளர்களை அழைத்து ஒரு குழுவை நியமித்து பின்னடைவில் இருந்து மீட்சி பெறுவதற்கு என்ன செய்யலாம் என்று ஆராய வேண்டும். அந்த ஆய்வின் முடிவுகளை செயற்படுத்தும் போது கல்வித் துறையை ஓரளவு மீளக்கட்டியெழுப்ப முடியுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பின்னடைவுக்குக் காரணங்கள் எவை? அவற்றை எவ்வாறு நிவர்த்திக்கலாம்? இவைதான் ஆய்வுக்குரிய விடயங்களாகும்.

ஆசிரியர்கள் விடயத்தில் நிருவாகங்கள் நடந்து கொள்ளும் பாரபட்ச நடைமுறையும் இதற்கு ஒரு காரணமாகவிருக்கலாமென தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டி வருகின்றன. ஆசிரிய நியமனம் தொடக்கம் இடமாற்றம் வரை பாரபட்சங்கள் இடம்பெறுவதாக அவர்கள் கூறுகிறார்கள். அதேவேளை பல ஆசிரிய தொழிற்சங்கங்கள் வெறுமனே அறிக்கையில் காலங்கடத்துவதாகவும் தமது நலன்களை துளியேனும் கவனிக்கிறார்களில்லை எனவும் ஆசிரியர்கள் கூறிவருகிறார்கள்.

எது எப்படியிருப்பினும், ஆசிரியர்களது மனங்கள் வெல்லப்பட வேண்டும். அவர்களது கல்விக் கொள்ளளவே நாட்டின் கல்வி மட்டமாகும் என்பதை மறந்து விடலாகாது.

யாழ்ப்பாணத்தில் பேசிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுள் ஒருவரான த.சித்தார்த்தன் கூறுகையில், இப்பின்னடைவுக்கு கடந்த கால யுத்தமே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் யுத்த காலத்தில் கூட கல்வி நிலைமை இத்துணை மோசமாக இருக்கவில்லை என்பதை பலரும் பல சந்தர்ப்பங்களில் பேசி வருவதையும் மறுதலிக்க முடியாது.

அண்மையில் சம்மாந்துறைக்கு விஜயம் செய்த கல்வி இராஜாங்க அமைச்சர் தான் கலந்து கொண்ட மூன்று நிகழ்வுகளிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பின்னடைவு பற்றிப் பேசியிருந்தார். அவரது கருத்தில் "இந்த மோசமான பின்னடைவுக்கான காரணம் கடந்த கால ஆட்சியாளர்கள் செய்த அநியாயமே. பாடசாலைகளை அழித்தார்கள். கல்விமான்களை கொன்றொழித்தார்கள். பாடசாலைப் பிரதேசங்களை இராணுவ உயர்பாதுகாப்பு பிரதேசமாக மாற்றினார்கள். இந்நிலையில் எவ்வாறு கல்வி வடக்கு, கிழக்கில் வளரும்?" என்று அவர் பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருந்தார்.

கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஒரு சந்தர்ப்பத்தில் கூறுகையில் கிழக்கில் இருக்கக் கூடிய ஆளணிகள் அனைத்தையும் புள்ளி விபரங்களுடன் விலாவாரியாகச் சொல்லி இத்துணை ஆளணிகள் கல்வித் துறையில் இருந்த போதிலும் கிழக்கு மாகாணம் இறுதி மாகாணமாக உள்ளது என்றார். இதுவும் கவனிக்கத்தக்கது. இதேவிடயத்தை முன்னாள் கிழக்குக் கல்விச் செயலாளர் திசாநாயக்க, திருமலையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசுகையில் குறிப்பிட்டிருந்தார்.

பட்டதாரிகளை தொடர்ந்து புறந்தள்ளி வருவதே கல்விப் பின்னடைவுக்கான காரணம் என்று வேலையில்லாப் பட்டதாரிகள் ஒன்றியத் தலைவர் யசீர் ஹமீட் குற்றம் சாட்டுகிறார். கிழக்கு மாகாணத்தில் சுமார் 7 ஆயிரம் பட்டதாரிகள் வேலைவாய்ப்பில்லாமல் உள்ளனர். ஆனால் கிழக்கு மாகாண சபை 2000 உயர்தர சித்தி பெற்றவர்களையும் 800 தொண்டர் ஆசிரியர்களையும் 600 பட்டதாரிகளையும் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ள விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. எனவே 7000 வேலையில்லாப் பட்டதாரிகளில் 2000 பேரையாவது இணைத்துக் கொள்ள ஆளுநர் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

இவ்வாறு குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக முன்வைக்கப்பட்டு வருகின்றவே தவிர, ஆக்கபூர்வமான யோசனைகளை, ஆய்வுகளை யாரும் சொல்வதாக இல்லை என இம்மாகாண மக்கள் கவலைப்படுகிறார்கள்.

இந்நிலை தொடர்ந்தால் வடக்கு, கிழக்கு கல்வி நிலைமை மேலும் வீழ்ச்சியடையும் என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை.

இம்முறை வெளியான பெறுபேறு மீதான பார்வை :

இம்முறை வெளியான பரீட்சைப் பெறுபேறுகளின்படி மாகாண ரீதியாக 25 மாவட்டங்களிலும் தோற்றிய சித்தியடைந்த மாணவர்களின் விபரத்தை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதனை ஆராய்ந்து பார்க்கையில் கீழ்வரும் தகவல்கள் வெளியாகின்றன.

க.பொ.த சாதாரண தரத் தேர்வு பெறுபேறுகளின்படி முதல் பத்து இடங்களைப் பிடித்த மாணவர்களின் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முதல் பத்து இடங்களில் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் எவரும் இடம்பிடிக்கவில்லை. தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள மாணவர்களே சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருக்கின்றனர்.

அண்மைக் காலமாக இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் மிகவும் நேர்த்தியாக இறுக்கமான நம்பகத்தன்மையான முறையில் பொதுப்பரீட்சைகளை நடாத்தி வருவது பாராட்டுக்குரியது.

அதற்காக ஆணையாளர், பிரதி ஆணையாளர்கள் உள்ளிட்ட குழுவினரைப் பாராட்டலாம். உரிய காலத்தில் பரீட்சை நடத்துவது, உரிய தினத்தில் முடிவுகளை வெளியிடுகின்ற நேர்த்தியான கண்ணியமான செயற்பாடு ஆகியவற்றுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கலாம்.

மாவட்ட ரீதியாக முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களது விபரங்களையும் பரீட்சைத் திணைக்களம் எதிர்காலத்தில் வெளியிட வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மாவட்ட ரீதியாக வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில், சராசரி பெறுபேற்றை விட குறைந்தளவிலேயே வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களின் நிலையும் காணப்படுகிறது.

22910 மாணவர்கள் தேர்வில் தோற்றிய அம்பாறை மாவட்டத்தில் இருந்து 8163 மாணவர்களே உயர்தர வகுப்புக்குச் செல்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 17126 மாணவர்கள் தேர்வில் தோற்றிய போதும் 6419 மாணவர்களே உயர்தர வகுப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 14291 மாணவர்கள் தேர்வில் தோற்றிய போதும் 4724 மாணவர்களே உயர் கல்விக்கான தகுதியைப் பெற்றுள்ளனர்.

17495 மாணவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து தேர்வில் தோற்றியிருந்த போதும் 6337 பேரே உயர்தர வகுப்புக்குச் செல்லவுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 4404 மாணவர்கள் தேர்வில் தோற்றியிருந்தனர். அவர்களில் 1434 பேர் உயர்கல்விக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் இருந்து 3638 மாணவர்கள் தேர்வில் தோற்றிய போதும் 1321 மாணவர்களே உயர்கல்வி கற்கும் வாய்ப்பை பெறவுள்ளனர்.

3494 மாணவர்கள் தேர்வில் தோற்றிய முல்லைத்தீவு மாவட்டத்தில் 1246 மாணவர்களே உயர்தர வகுப்புக்குச் செல்கின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் இருந்து 5143 மாவர்கள் தேர்வில் தோற்றியிருந்தனர். இவர்களில் 1129 பேர் மாத்திரமே உயர்கல்விக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

க.பொ.த சாதாரண தர தேர்வில் இம்முறை – நாடளாவிய ரீதியாக சராசரியாக 71.66 வீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். 518184 பரீட்சார்த்திகள் தோற்றியதில் 235373 பரீட்சார்த்திகள் சித்தி பெற்றுள்ளனர். அதாவது அது 71.66 வீதமாகும். இவர்களில் 9413 பேர் சகலபாடங்களிலும் 9 ஏ சித்திகளைப் பெற்று வரலாறு படைத்திருக்கிறார்கள் என்பது திணைக்களத்தின் பதிவாகும்.

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் 64.4 சதவீதமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 62.51 சதவீதமும் திருகோணமலை மாவட்டத்தில் 53.17 சதவீதமும் மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 67.02 சதவீதமும் கிளிநொச்சி மாவட்டத்தில் 54.3 சதவீதமும் மன்னார் மாவட்டத்தில் 69.34 சதவீதமும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 60.4 சதவீதமும் வவுனியா மாவட்டத்தில் 68.28 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்ட ரீதியான தேர்ச்சி வீத அடிப்படையில் 25 மாவட்டங்களிலும் கடைசி இடத்தை திருகோணமலை மாவட்டமும் அதற்கு முந்திய 24 ஆவது இடத்தை கிளிநொச்சி மாவட்டமும் பெற்றுள்ளன.

தேசிய அளவிலான சராசரி தேர்ச்சி வீதத்தை விட (71.66) அதிகமான தேர்ச்சி வீதத்தை ஏனைய பகுதிகளில் உள்ள 8 மாவட்டங்கள் கொண்டிருக்கின்ற போதும் வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களும் சராசரி நிலையை விடக் கீழேயே இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே இப்பெறுபேறு பல தகவல்களை கூறுகின்ற அதேவேளை ஆய்வின் அவசியத்தை சுட்டி நிற்கின்றது. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் மேலும் வீழ்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லவே வழிவகுக்கும். எனவே சம்பந்தப்பட்டவர்கள் விழித்தெழுந்து ஆக்கபூர்வமான செயற்பாட்டிலீடுபட வேண்டுமென்பதே அனைவரினதும் அவா.

வி.ரி.சகாதேவராஜா
உதவிக் கல்விப் பணிப்பாளர்

(இன்றைய தினகரன் பத்திரிக்கையிலிருந்து பெறப்பட்ட செய்தி)

No comments:

Post a Comment