மட்டக்களப்பு மாநகர சபையின் அதிகார எல்லைக்குள் காணப்படும் பிரச்சனைகளை மாநகர முதல்வரிடம் தெரியப்படுத்தி அவற்றுக்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொது மக்களுக்கான 'முதல்வரிடம் சொல்லுங்கள்' Tell to Mayor என்ற வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நவீன தொழிநுட்பத்துடன் கூடிய ஓர் மாநகரை கட்டியெழுப்பும் நோக்கோடு மட்டக்களப்பு மாநகர சபையும், I Community தொழிநுட்ப நிறுவனத்தினரும் இணைந்து நடத்திய விஷேட செயல் விளக்கத்தின் போது இந்த இணையத்தள ஆரம்ப நிகழ்வு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நேற்று முன்தினம் காந்தி பூங்கா முன்றலில் இடம்பெற்றது.
நவீன தொழிநுட்பத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கோடும், புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் இச்செயல் விளக்க அமர்வாகவும் இது அமைந்திருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் தற்கொலைகளுக்கு தீர்வாக நவீன தகவல் தொழிநுட்பத்தின் ஊடாக நம்பகமான உளவள ஆலோசனைகளை வழங்குவது தொடர்பாகவும், இங்கு ஆராயப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அராங்க அதிபர் மா.உதயகுமார், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் சி.பிரகாஷ், மாநகர சபையின் பிரதி ஆணையாளர் நா.தனஞ்ஜெயன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்தின் வளவாளர் கசுன் ஆகியோர் கலந்து கொண்டு தகவல் தொழிநுட்ப ரீதியாக பல்வேறு துறைகளில் தமது திட்டங்களை முன்மொழிந்த திறன்சார் வல்லுனர்களைப் பாராட்டியதோடு அவர்களுக்கான பரிசில்களையும் வழங்கினர்.
No comments:
Post a Comment