தமிழ் மக்களுக்கு சுயாட்சி கிடைக்க வேண்டுமென்பதற்காக அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக தமிழினம் அகிம்சை முறையிலும், ஆயுத வழியிலும், அரசியல் நெறியிலும் போராடி வந்திருக்கின்றது. ஆனால், வரவுள்ளதாகச் சொல்லப்படுகின்ற புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதித்தவிசாளருமான பொறியியலாளர் வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
இவரின் காரைதீவில் அலுவலகத்தில் ஆதரவாளர்களைச்சந்தித்து இன்று (16) புதன்கிழமை பேசிய போதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் இங்கு மேலும் பேசும் போது, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக எத்தனையோ போராளிகள் மற்றும் பொது மக்கள் இன்னுயிர்களைத் துறந்துள்ளார்கள். தமிழர் பிரதேசங்கள் வகை, தொகையற்ற பேரழிவுகளை எதிர்கொண்டன. இவற்றின் எச்சங்கள் எமது மக்களை இப்போது வரை அச்சுறுத்தி கொண்டு தான் உள்ளன. ஆனால், தமிழ் மக்கள் விரும்புகின்ற அரசியல் தீர்வு எட்டாக்கனியாகவே தொடர்கின்றது.
புதிய அரசியலமைப்பைக்கொண்டு வரவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி பிரகடனப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக தமிழ் மக்களுக்கு அனைத்துமே கிடைக்குமென்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பிதற்றுகின்றது. ஐக்கிய தேசிய கட்சிக்கு முட்டுக்கொடுக்கின்ற வேலையையே அரசியல் தீர்வு விடயத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை செய்து கொண்டு, இப்புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு குறுக்கே போடப்படுகின்ற மின்சார வேலி என்கிற உண்மையை மறைக்கின்றது.
இவர்கள் எல்லோரையும் ஒரு படி மிஞ்சியவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தமிழ் மக்களை உஷார் மடையர்களாக்கி பேய்க்காட்டுவதை அவருடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியின் உச்சபட்ச கடமைப் பொறுப்பாகக் கொண்டிருக்கின்றார்.
புதிய அரசியலமைப்பில் சமஷ்டி, இணைப்பாட்சி, வடக்கு, கிழக்கு இணைப்பில்லை. பௌத்தத்துக்கே முதலிடமும் முன்னுரிமையும் ஒற்றையாட்சியே தொடரும் என்று ஐக்கிய தேசிய கட்சித்தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாகவே வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
அப்படியாயின், இந்த புதிய அரசியலமைப்பு மூலமாக என்ன முன்னேற்றம் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்போகின்றது? எமது இளையோர்களும், பொது மக்களும் அவர்களின் இன்னுயிர்களை இதற்காகவா தொடர்ந்தேச்சையாக இழந்தனர்? என்று நான் கேட்கின்றேன்.
மாறாக, ஸ்ரீலங்கா சுதந்திரமடைந்த காலந்தொட்டு இருந்து வருகின்ற ஒற்றையாட்சி முறைமையை முடிவுக்கு கொண்டு வருவதில் தான் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வின் வெற்றி தங்கியுள்ளது. ஏக்க இராஜ்ஜிய என்கிற சொல்லுக்குள் சமஷ்டி மறைந்திருப்பதாகச் சொல்லி சொல்லியே சுமந்திரன் தமிழ் மக்களைத்தொடர்ந்தும் ஏமாற்றி கொண்டிருக்கின்றார். ஆயினும், இனியும் தமிழ் மக்கள் இவர்களின் பசப்பு வார்த்தைகளுக்கு ஏமாறவே மாட்டார்கள்.
எஸ்.அஷ்ரப்கான்
No comments:
Post a Comment