தோட்டத் தொழிலாளர்களை முதலாளிமார் சம்மேளனத்திடம் காட்டிக் கொடுத்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் குறுக்கு வழியில் அமைச்சுக்களைப் பெற முயற்சி - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 30, 2019

தோட்டத் தொழிலாளர்களை முதலாளிமார் சம்மேளனத்திடம் காட்டிக் கொடுத்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் குறுக்கு வழியில் அமைச்சுக்களைப் பெற முயற்சி

தோட்டத் தொழிலாளர்களை முதலாளிமார் சம்மேளனத்திடம் காட்டிக் கொடுத்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தற்போது பின் கதவால் அரசாங்கத்துக்குள் நுழைந்து அமைச்சுப் பதவியை பெறும் குறுக்குவழி அரசியலிலும் ஈடுபட்டுள்ளதாக, ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட எம்.பியுமான வேலுகுமார் ​தெரிவித்துள்ளார். 

கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பெரும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளதென்றும் வெறும் 20 ரூபாவே சம்பள உயர்வாக வழங்கப் பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இது தொடர்பில் வேலுகுமார் எம்.பி. மேலும் கூறியதாவது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக 1,000 ரூபா வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. இதற்கென அரசியல் மட்டத்திலான அழுத்தங்களையும் நாம் பிரயோகித்ததுடன், போராட்டங்களையும் நடத்தியிருந்தோம். 

எனினும், அடிப்படை நாட் சம்பளமாக 1,000 ரூபா கிடைக்காவிட்டால் உடன்படிக்கையில் கைச்சாத்திட மாட்டோம் என வீறாப்பு பேசிய ஆறுமுகன் தொண்டமானும், வடிவேல் சுரேசும் இறுதி நேரத்தில் ‘பல்டி’ அடித்து பாரிய காட்டிக் கொடுப்பைச் செய்துள்ளனர். 

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரிய தொழிலாளர்களின் அடிவயிற்றில் அடித்துவிட்டு, 20 ரூபா சம்பள உயர்வுக்கு ‘ஆமாம் சாமி’ போட்டு, கம்பனிகளிடம் முழுமையாக சரணடைந்துள்ளனர். இதற்கு பெயர் வரலாற்று வெற்றி அல்ல, பச்சைத் துரோகமாகும். 

2016 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் நாளொன்றுக்கான மொத்த சம்பளமாக 730 ரூபா வழங்கப்பட்டது. இம்முறை கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் 750 ரூபா வழங்கப்படவுள்ளது. 

கூட்டு ஒப்பந்த விவகாரத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றே மூன்றாம் தரப்பாக அரசாங்கத்தின் தலையீட்டை நாம் கோரினோம். எனினும், கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டுத் துரோகத்துக்கு பிரதமரும் துணை போய்விட்டாரா என்ற சந்தேகமும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா இல்லாத ஒப்பந்தத்தை அலரி மாளிகையில் வைத்து கைச்சாத்திடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டமை தவறான முன்னுதாரணமாகும். இந்நிகழ்வுக்கு பிரதமர் தலைமை வகித்திருக்க கூடாது. 

இதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். பிரதமரை நேரில் சந்தித்து அதிருப்தியை வெளியிடவும் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

அரசாங்கத்தின் பங்காளி கட்சியாக இருந்த போதிலும் ஐக்கிய தேசியக்கட்சி செய்யும் அனைத்து விடயங்களுக்கும் கைதூக்கும் அளவுக்கு எமது கூட்டணி வங்குரோத்து அரசியலை நடத்தவில்லை. மக்களுக்கு துரோகம், அநீதி இழைக்கப்படுமானால் பதவி, பட்டம் எல்லாவற்றையும் தூக்கியெறியவும் தயார் நிலையிலேயே இருக்கிறோம்.

அதேவேளை, தொழிலாளர்களை பணயம் வைத்து, அரசாங்கத்துக்குள் நுழைந்து அமைச்சுப் பதவியை பெறும் நயவஞ்சக அரசியலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இறங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment