பாராளுமன்றத்திலுள்ள 225 பேரும் கையொப்பமிட்டு தம்மிடம் பரிந்துரைத்தாலும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்போவதில்லை என ஜனாதிபதி உறுதியாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களுக்கும் இடையே இன்று (03) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் தோல்வியில் நிறைவடைந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களுக்கும் இடையே இரண்டாவது தடவையாக இடம்பெற்ற பேச்சுவார்த்தை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பிற்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவி மீண்டும் வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி தெரிவித்ததாக கூறினார்.
ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களுக்கும் இடையேயான சந்திப்பு நேற்று நடைபெற இருந்த போதும், குறித்த சந்திப்பு இன்று (03) இரவு 8 மணிக்கு பிற்போடப்பட்டது.
இதேவேளை, ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களுக்கும் இடையேயான முதலாவது சந்திப்பு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment