கிழக்கில் முதலாவது மாற்றுத்திறனாளிகளுக்கான சாரணர் படை நேற்று (03) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதுடன், சின்னமும் சூட்டப்பட்டது.
மட்டக்களப்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் சம்மேளனம், விசேட தேவையுடையோர் சார்ந்து செயற்படும் அமைப்புகள் இணைந்து பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன் ஒரு பகுதியாக மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ யின் அனுசரணையில் 32 பேர் கொண்ட சாரணர் படை ஆரம்பிக்கப்பட்டு சின்னஞ் சூட்டப்பட்டது.
குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித்த போகொல்லாகம, திருமதி ரோகித்த போகொல்லாகம, விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட சாரண சங்கத் தலைவருமான மா.உதயகுமார், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில் அவர்களைக் கௌரவிக்கும் வகையிலும் சமூகத்தில் அவர்களுக்கும் அங்கீகாரம் வழங்கும் வகையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான முதலாவது சாரணர் படை உருவாக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment