க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாடெங்கும் நாளை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் அன்பான மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.
இப்பரீட்சைக்கென உங்களை முழுமையாகத் தயார்படுத்தியிருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் முழுமையான தயார்படுத்தலைத் தவிர வேறு சில உத்திகளையும் நீங்கள் கையாண்டால் சிறந்த பெறுபேற்றை எய்துவதில் சந்தேகத்துக்கு இடமில்லை.
இன்று முடிவடையும் பாடத்தை இன்றுடன் மறந்து விடுங்கள். எழுதி முடித்த பரீட்சையில் சரி பிழைகளை நினைத்துப் பார்த்து நேரத்தையும் மனதையும் பாழாக்கிக் கொள்ளும் வேளை இதுவல்ல.
நாளைய பரீட்சையை மிகவும் திறமையாக எழுத வேண்டுமென்ற மனஉறுதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பரீட்சைக்குப் புறப்படும் போதும், வினாத்தாள் கையில் கிடைக்கும் வேளையிலும் வீணான மனப்பதற்றம் வேண்டாம். மனதை ஒருநிலைப்படுத்தி பதற்றத்தைத் தணியுங்கள். பதற்றம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். உங்களுக்குத் தெரிந்த விடைகள் கூட நினைவுக்கு வராமல் மயக்கத்தையும் பரபரப்பையும் தரலாம். அல்லது வினாவை சரியாகப் புரிந்து கொள்ளத் தவறும் குழப்பமும் ஏற்பட இடமுண்டு.
‘பதற்றம் முட்டாளுக்கு உரியது. நன்கு கற்றுள்ள எனக்குப் பதற்றம் அவசியமில்லை’ என்ற மனத் தைரியத்துடன் நிதானமாக எழுதத் தொடங்குங்கள். தெளிவான கையெழுத்து, வினாவுக்கு உரிய விடை, நேர முகாமைத்துவம், எழுத்துப் பிழைகளைத் தவிர்த்தல் போன்றவற்றை நிதானமாகக் கடைப்பிடித்து விடை எழுதுங்கள். உங்களது வெற்றி நிச்சயம்.
எதிர்காலத்தில் உயர் கல்விக்கான வாய்ப்பு இந்தப் பரீட்சை பெறுபேறுகளின் மூலமே கிடைக்கவிருக்கின்றது என்பதை மனதில் கொண்டு இந்த சந்தர்ப்பத்தை நீங்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
எனவே உங்கள் பெற்றோர்களினதும் பாடசாலை சமூகத்தினதும் எதிர்பார்ப்புக்களை நீங்கள் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என இந்த தருணத்தில் உங்களை அன்புடன் கேட்டுக் கொள்வதுடன், உங்களின் எதிர்காலம் சிறந்த முறையில் அமையப்பெற வேண்டுமென்ற துஆவுடன் உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களை கூறி விடைபெறுகின்றேன்.
As Sheikh: M.T.M.Rizvi (Majeedy), BA (Hons), PGDE MA, Mphil,
Senior Lecturer, Head of Dept. of Islamic Studies
Eastern University Sri Lanka
No comments:
Post a Comment