கிழக்கில் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களை களைய அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டுமென கோரிக்கை! - News View

About Us

About Us

Breaking

Monday, December 3, 2018

கிழக்கில் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களை களைய அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டுமென கோரிக்கை!

கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களை களைய அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் இன்று முன்னாள் போராளிகளும் அவர்களின் குடும்பமும் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

மட்டக்களப்பு, கல்லடியில் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடக சந்திப்பொன்று நேற்று (03) மாலை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் க.இன்பராஜா, ஊடகப்பேச்சாளர் ஜோன்சன் உட்பட கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது கடந்த 30ஆம் திகதி வவுணதீவில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு பொலிஸாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் படுகொலை தொடர்பில் தமது கட்சி கடும் கண்டனம் தெரிவிப்பதுடன் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வண்ணம் அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறித்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தினை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின்போது போராளிகள் பாதிக்கப்படுவது தொடர்பில் தமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் முன்னாள் போராளிகள் மீதான விசாரணைகள் காரணமாக முன்னாள் போராளிகளும் அவர்களின் குடும்பமும் பெரும் அச்ச நிலையில் வாழ்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

முன்னாள் போராளிகள் இந்த நாட்டில் அச்சமற்ற நிலையில் வாழும் சூழ்நிலையினை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மட்டக்களப்பில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள முன்னாள் போராளிகளை அச்சம் கொள்ளச் செய்துள்ளதாகவும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் வெளிப்படுத்தப்படும்போதே முன்னாள் போராளிகளின் அச்சம் நீக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

முன்னாள் போராளிகள் இன்று மீண்டும் ஆயுதம் தூக்கி போராடக்கூடிய மன நிலையில் இல்லை என்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment