அமைதி பேச்சுவார்த்தையை ஜனாதிபதி ஏற்காவிடின் பிரச்சினை தீர்க்கப்படும்வரை போராட தாம் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பிரதமரின் செயலாளர் நாட்டின் நிதியைப் பயன்படுத்துவதை இரத்து செய்யும் பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இந்த குழப்பமான சந்தர்ப்பத்தில் யாராவது ஒருவர் ஒரு பக்கத்தில் சமாதான கொடியை காட்டினால் அந்த பக்கம் தொடர்பில் கவனம் செலுத்த நான் தயார்.
தற்போது நாம் போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அதுபோல சமாதானத்திற்கும் முன்னிற்போம். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டுள்ள ஒருவருக்கு பிரதமர் பதவியை வழங்கி, அவர் அமைக்கும் அமைச்சரவையை ஏற்றுக்கொள்வதே சிறந்தது.
ஆகவே பிரச்சினையை தீர்க்க சபாநாயகர் தலையீடு செய்ய வேண்டும். இதற்காகவே நாம் போராடுகின்றோம். அதுவே சர்வதேசத்தின் நிலைப்பாடாகும். ஆகவே விஜயதாச ராஜபக்ஷ கோரும் அமைதி பேச்சுவார்த்தைக்கு சபாநாயகராகிய நீங்கள் தலைமை ஏற்க வேண்டும்.
இந்த கோரிக்கையை உடனடியாக ஜனாதிபதியிடம் நீங்கள் தெரியபடுத்த வேண்டும். ஆனால் அதனையும் ஜனாதிபதி ஏற்காவிடின் பிரச்சினை தீர்க்கப்படும் வரை போராட நாம் தயார்” என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment