நாட்டின் அரசியலமைப்புக்கமைய சட்டவாக்க அதிகாரம் மற்றும் நீதிமன்ற அதிகாரம் என்பன பாராளுமன்றத்துக்கே வழங்கப்பட்டுள்ளன - News View

About Us

About Us

Breaking

Thursday, November 29, 2018

நாட்டின் அரசியலமைப்புக்கமைய சட்டவாக்க அதிகாரம் மற்றும் நீதிமன்ற அதிகாரம் என்பன பாராளுமன்றத்துக்கே வழங்கப்பட்டுள்ளன

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலைக்கு நீதிமன்றத்தை நாடாது நிறைவேற்று அதிகாரத்துக்கும், சட்டவாக்க த்துக்கும் இடையில் கலந்துரையாடல்களை நடத்தித் தீர்வு காண்பதே பொருத்தமானதென அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று (29) விசேட உரையொன்றை ஆற்றும்போதே அவர் இந்தக் கருத்தை முன்வைத்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து அரசாங்கத்தை அமைத்தபோது இரு தரப்பினருக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் காணப்பட்டன. இதனால் ஏற்பட்ட அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொண்டும், ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கை யீனம் அதிகரித்த சூழ்நிலையிலேயே ஒக்டோபர் 26ஆம் திகதி ஆட்சிமாற்றம் நிகழ்ந்தது. 

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டு அமைச்சரவையும் நியமிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு, அது உச்சநீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டது.

இவ்வாறான பின்னணியிலேயே கடந்த 14,15, 16ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூட்டப்பட்டது. இதன்போது இடம்பெற்ற சம்பவங்களால் மக்கள் வெறுப்படைந்து ள்ளனர். நாட்டின் நிர்வாகம் குழப்பத்துக்குள்ளாகி என்ன நடக்கிறது என்பது தொடர்பில் நாட்டு மக்கள் கேள்விகேட்கும் நிலை காணப்படுகிறது.

இதனால் ஒரு தரப்பு மற்றைய தரப்பினர் மீது குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையுமே அடுக்கி வருகின்றன. இதனால் மக்களுக்கு எந்தவிதமான விமோசனமும் கிடைக்கவில்லை என்பதே உண்மையாகும்.

யார் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும்? அமைச்சரவையில் யார் யார் அங்கம் வகிக்க வேண்டும்? பாராளுமன்றம் கலைக்கப்படும் திகதி என்ன ? என்பது போன்ற விடயங்கள் நிறைவேற்று அதிகாரத்தினாலும், சட்டவாக்கத்தினாலும் பேசித் தீர்க்கப்பட வேண்டிய விடயமே தவிர, நீதிமன்றத்தை நாடவேண்டிய விடயமல்ல.

நாட்டின் அரசியலமைப்புக்கமைய சட்டவாக்க அதிகாரம் மற்றும் நீதிமன்ற அதிகாரம் என்பன பாராளுமன்றத்துக்கே வழங்கப்பட்டுள்ளன. இந்த சபைக்கு வழங்கப்பட்டுள்ள உயர்ந்த அதிகாரத்துக்கு அமைய தயாரிக்கப்படும் சட்டத்தினால் அதனைத் தீர்க்கும் அதிகாரமும் பாராளுமன்றத்துக்கே உள்ளது.

அவ்வாறான சூழ்நிலையில் சபையில் முன்னெடுக்கப்படும் விவகாரம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்கச் சபைக்கு இடையிலான கருத்து முரண்பாடு போன்றனவும் பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களின் கலந்துரையாடல் மூலத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

ஜனநாயகக் கட்டமைப்பில் உங்கள் பிரச்சினையைத் தீர்க்க முடியாவிட்டால் மக்களின் பிரச்சினையை நீங்கள் எப்படித் தீர்ப்பீர்கள் என்ற கேள்வி எங்கள்மீது முன்வைக்கப்பட்டால் எமக்கு பதிலளிக்க முடியாது போகும்.

எனவே, இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் முடிவெடுக்க உச்ச நீதிமன்றத்துக்கு இடமளிப்பது என்பது பாராளுமன்றத்தை குறைத்து மதிப்பிடுவது மாத்திரமன்றி பிரச்சினையைத் தீர்ப்பதாக அமையாது.

சட்டவாக்கத்தின் தலைவர் என்ற ரீதியில் சபாநாயகரும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் கலந்துரையாடல் களை நடத்தி தற்பொழுது தோன்றியுள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பொறுப்புள்ளது.

நிறைவேற்று அதிகாரத்தினால் வழங்கப்படும் உத்தரவுகள் சட்டவாக்கத்தினால் நிராகரிக்கப்படுவதும், சட்டவாக்கத்தினால் நிறைவேற்றப்படும் பிரேரணைகள் நிறைவேற்று அதிகாரத்தினால் நிராகரிக்கப்படுவதுமே தற்பொழுது காணப்படுகிறது. தற்பொழுது ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலையில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் வெற்றி கிடைக்காது.

நாம் ஒருவருக்கு ஒருவர் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதன் மூலம் நாட்டின் அரசியல் கலாசாரம் மேலும் கேலிக்கூத்தாக்கப்படுகிறதே தவிர எந்தவொரு தரப்புக்கும் நன்மை கிடைக்கவில்லை யென்றும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

No comments:

Post a Comment