மக்கள் சேவை பாதிப்படைவதற்கு இடமளிக்காதிருப்பது அனைத்து அரசாங்க அதிகாரிகளினதும் பொறுப்பாகும் : 7000 சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Friday, November 30, 2018

மக்கள் சேவை பாதிப்படைவதற்கு இடமளிக்காதிருப்பது அனைத்து அரசாங்க அதிகாரிகளினதும் பொறுப்பாகும் : 7000 சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி

தற்போதைய அரசியல் நிலைமைகள் காரணமாக நாட்டு மக்களின் வாழ்க்கையில் எந்தவிதமான அழுத்தங்களும் ஏற்படக்கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மக்கள் சேவைகள் பாதிப்படைவதற்கு இடமளிக்காதிருக்கும் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றுமாறும் அனைத்து அரசாங்க அதிகாரிகளிடமும் கேட்டுக்கொண்டார்.

நேற்று (30) பிற்பகல் கொழும்பு சுஹததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிரந்தர நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
சுமார் 27,000 சமுர்த்தி அதிகாரிகளின் வாழ்க்கை எதிர்பார்ப்பான முழுமையான ஓய்வூதியத்துடன், கூடிய நியமனக் கனவை நனவாக்கும் வகையில் சுமார் 7,000 பேருக்கு நிரந்த நியமனங்கள் இதன்போது வழங்கப்பட்டன.

தான் அனைத்து அமைச்சுக்களினதும் செயலாளர்களை நியமித்திருப்பது அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு ஏற்பவாகும். எனவே அந்த அனைத்து நியமனங்களும் சட்டபூர்வமானது என்பதுடன், அதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அவர்கள், நாட்டில் எத்தகைய அரசியல் நிலைமைகள் ஏற்பட்டாலும் தமது அமைச்சுக்களின் நடவடிக்கைகளை உரிய முறையில் நிறைவேற்றி, நாட்டின் அனைத்து துறைகளையும் உரிய முறையில் பேணுவது அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளின் பொறுப்பாகும் என்று மேலும் தெரிவித்தார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பொருளாதார அபிவிருத்திக்கு சமுர்த்தி இயக்கம் மேற்கொண்டுவரும் பணிகளை பாராட்டிய ஜனாதிபதி, சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின் பணிகளையும் பாராட்டினார்.

வீடமைப்பு, சமூக நலன்புரி அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட அமைச்சர்களும் வீடமைப்பு, சமூக நலன்புரி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்ஹ, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் நிமல் கொடவலகெதர ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment