நான் இருக்கும்வரை வடக்கு, கிழக்கை இணைக்க விடமாட்டேன், சமஷ்டி தீர்வையும் அளிக்கமாட்டேன் - இவ்வாறு திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இந்த இரண்டு விடயங்களையும் அமுல்படுத்துவதானால் தன்னை கொலை செய்த பின்னரேயாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கும், கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (31) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சிலர் அரசாங்கம் சமஸ்டி தீர்வையும், வடக்கு கிழக்கு இணைப்பையும் வழங்க தயாராகவிருப்பதாக தெரிவித்து வருவது குறித்து தனக்கு அறியக்கிடைத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் தானும் மிகுந்த அவதானத்துடனும் புரிந்துணர்வுடனும் செயற்பட்டு வருவதாகவும், அடுத்துவரும் நாட்களில் இருவரும் கலந்துரையாடிய தீர்மானங்களாகவே மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோரும் அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment