மட்டக்களப்பு மாநகர சபைக்கு மூவாயிரம் புத்தகங்களை சிங்கப்பூர் அரசாங்கம் வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வந்த தேசிய வாசிப்பு மாத நிகழ்வின் இறுதி நிகழ்வாக கல்லடி பொதுநூலகத்தின் ஏற்பாட்டில் புத்தக கண்காட்சி நேற்று (புதன்கிழமை - 31) திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போதைய புள்ளி விபரங்களின்படி நூலகத்திற்கு வந்து நூலகத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாகக் காணப்படுகின்றது.
வயதானவர்கள் பத்திரிகை வாசிப்பதற்காக வருகின்றனர். பாடசாலை மாணவர்கள் வருவது குறைவாகவே காணப்படுகின்றது.
எங்களுடைய மாநகர சபையின் கீழ் இயங்குகின்ற பாலர் பாடசாலைகளை ஒரு நாளைக்கு ஒரு நூலகத்திற்கு கொண்டு சென்று அந்த நாள் முழுவதையும் அவர்கள் நூலகத்தில் செலவிட வைக்க இருக்கின்றோம்.
இதன்மூலம் அவர்களின் வாசிப்புத் திறனை அதிகரிக்கச் செய்வதற்கான ஒரு திட்டத்தை இவ்வருடத்திலிருந்து அமுலுக்கு கொண்டுவர இருக்கின்றோம்.
பிள்ளைகளுக்கு வாசிப்பதில் ஆர்வம் மிகவும் குறைந்து கொண்டு செல்கின்றது. நூலகத்தை பயன்படுத்துவதன் மூலமே பல விடயங்களை பெற்றுக்கொள்ள முடியும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment