புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் மங்களஎளிய பகுதியில் நேற்று புதன்கிழமை (31) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
முந்தல் பகுதியிலிருந்து மங்களஎளிய நோக்கிப் பயணித்த லொறி வேகத்தை குறைக்க முற்பட்ட போது பின்னால் சென்றுகொண்டிருந்த சிறிய ரக பட்டா லொறியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லொறி மீது மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மஹாவெவ பகுதியைச் சேர்ந்த முதியன்சலாகே சுகத் அதிகாரி (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார் என முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். பட்டா லொறி மஹாவெவ பகுதியில் இருந்து வியாபார நோக்கத்திற்காக புத்தளம் நோக்கி வந்துள்ளது.
விபத்தில் பட்டா லொறியின் சாரதிக்கருகிலிருந்து பயணித்த நபரே ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பட்டா லொறியின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்தமையினால் உயிரிழந்த நபருடைய சடலத்தை லொறிக்குள்ளிருந்து வெளியே எடுப்பதற்கு அங்கிருந்தவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
இவ்விபத்தினால் புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் மங்களஎளிய பகுதியில் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டிருந்ததுடன், முந்தல் போக்குவரத்து பொலிஸார் ஸ்தலத்திற்கு வருகை தந்து போக்குவரத்தை சீர்செய்தனர்.
விபத்துடன் தொடர்புடைய இரண்டு லொறிகளின் சாரதிகளும் படுகாயமடைந்த நிலையில் முந்தல் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனைகள் , மரண விசாரணைகள் புத்தளம் தள வைத்தியசாலையில் நிறைவடைந்த பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சம்பவம் தொடர்பில் முந்தல் போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment