``இதுபோன்ற மிக முக்கியமான நாளை இந்திய வரலாற்றில் இருந்து அழிப்பது மிகவும் கடினமாக விஷயம்'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2010-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, சர்தார் வல்லபாய் படேலுக்கு நர்மதை நதிக்கரையிலுள்ள சர்தார் சரோவர் அணை அருகே மிகப் பெரிய சிலை அமைக்கப்படும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்.
இந்தியாவின் 'இரும்பு மனிதர்' என்று அழைக்கப்படும் இந்தியாவின் முதலாவது துணைப் பிரதம அமைச்சராகவும், முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் இந்த சிலை 182 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 3,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் பிரமாண்ட சிலையை சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்த தினமான நேற்று (31) திறந்து வைத்தார் பிரதமர் மோடி.
இந்தச் சிலையைத் திறந்து வைத்த பின்னர் பேசிய பிரதமர் மோடி, ``இதுபோன்ற மிக முக்கியமான நாளை இந்திய வரலாற்றிலிருந்து அழிப்பது மிகவும் கடினமாக விஷயம். இது அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு வரலாற்று மற்றும் எழுச்சியூட்டும் நிகழ்வாகும்.
இந்தச் சிலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. நான் முதல்வராக இருந்தபோது சிலை கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டது.
பின்பு நான் பிரதமராக வந்து இதைத் திறந்து வைப்பேன் என நினைக்கவில்லை. ஒற்றுமைக்கான சிலையை உருவாக்க இந்தியாவில் உள்ள இலட்சக்கணக்கான விவசாயிகள் முன்வந்து தங்களால் முடிந்த பொருள்கள், மண் வழங்கியதன் மூலம் இந்தப் பணி தொடங்கப்பட்டது.
இந்தியா ஒற்றுமையாக இருப்பதற்கு சர்தார் படேல் மிக முக்கிய காரணம். இந்தச் சிலை உருவாக்கக் காரணமாக இருந்தவர்களுக்கும் இதை உருவாக்கியவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பேசியுள்ளார்.
சர்தார் வல்லபாய் படேல், நாட்டை ஒன்றுபடுத்தியதை குறிப்பிடும் வகையில், 'ஒற்றுமைக்கான சிலை' என்று இது அழைக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment