தெற்குக்கான இலங்கை பலஸ்தீன் நட்புறவுச் சங்கம் இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் ஸுஹைர் ஹம்தல்லா ஸைத் அவர்களின் பிரசன்னத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடந்த 25 ஆம் திகதி காலி கலுவெல்லயில் அமைந்துள்ள சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற அங்குரார்ப்பண விழாவில் காலி மாநகர சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உட்பட பெருவாரியான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய உலக நீதிக்கான இலங்கை ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜயதிலக டி சில்வா, பலஸ்தீன் பிரச்சினையை சர்வதேசப் பிரச்சினையாக விளங்கிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், பலஸ்தீன் மக்களின் சுதந்திரத்துக்கான மனிதாபிமானத் தேவையையும் வலியுறுத்திப் பேசினார்.
தொடர்ந்து உலக நீதிக்கான இலங்கை ஊடகவியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஹத்தக உரையாற்றும் போது, பலஸ்தீனில் நடக்கும் மனித அவலங்களை விபரித்ததோடு பலஸ்தீனப் பிரச்சினை முஸ்லிம்களுடைய பிரச்சினை அல்ல, அது ஆக்கிரமிப்புக்கு எதிரான சுதந்திர மக்களின் போராட்டம் என எடுத்துக் கூறியதோடு, இஸ்ரேல் பற்றியும் அதன் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் பற்றியும் மக்களுக்கு விளக்கினார்.
இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் பலஸ்தீனுடைய தற்போதைய நிலவரம் பற்றி மக்களுக்கு விளக்கினார். தெற்குக்கான பலஸ்தீன் நட்புறவுச் சங்கத்தின் தலைவராக பத்தேகம சமித்த தேரர் நியமிக்கப்பட்டார்.
No comments:
Post a Comment