கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் வாக்குகளை பெற்று அரியாசனம் ஏறிக்கொண்ட இரண்டு அமைச்சர்களும், தமிழர்கள் நடாத்தும் போராட்டத்தை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்திருப்பது ஏன் என தமிழ் உணர்வாளர் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
மட்டக்களப்பு புல்லுமலை தண்ணீர் போத்தல் தொழிற்சாலை சர்ச்சை தொடர்பாக தமிழ் உணர்வாளர் அமைப்பு நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கைலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக ஆங்காங்கே மக்கள் போராட்டங்கள் நடத்தியபோது இது ஒருசில அரசியல்வாதிகளின் சில்லறைத்தனமான போக்கு என்று அறிக்கை விட்ட அமைச்சர் அமீர் அலி, தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக முழு மாவட்ட மக்களும் அனுஷ்டித்த ஹர்த்தால் பற்றி என்ன கருத்து கூறப் போகின்றார்.
தேர்தல் காலங்களிலே பிள்ளையான் மூலமும் கணேசமூர்த்தி மூலமும் தமிழர்களின் வாக்குகளை அள்ளிச் சென்ற இவர்கள் மௌனம் காப்பது தமிழர்கள் மத்தியில் வெறுப்பையும் விசனத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது.
வட மாகணத்திலே இருக்கின்ற பிரதி அமைச்சர் அங்கஜனுக்கே இதில் அக்கறை எடுக்க முடியுமென்றால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் வாக்குகளை பெற்று வந்த இரண்டு அமைச்சர்களும் அரியாசனம் ஏறிக் கொண்டு தமிழர்கள் நடாத்தும் போராட்டத்தை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இனிவரும் காலங்களில் ஒன்றுமறியாத தமிழ் பாமர மக்கள் சோளங்கொட்டையையும், மண்வெட்டியையும் வாங்கிக்கொண்டு இனிவரும் காலங்களில் துணை போக மாட்டார்கள் என்பதை எதிர்காலம் உங்களுக்கு கற்ப்பிக்கும். அதேவேளை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டமானது ஒரு இனத்திற்கோ மதத்திற்கோ எதிரான போராட்டம் அல்ல.
புல்லுமலை சார்ந்த பிரதேசம் வானம் பார்த்து வயிறு பிழைக்கும் விவசாயிகள் வாழுமிடம். இந்த இடத்தில் நிலத்தடி நீரை விற்று பிழைக்க நினைப்பது ஒரு மனிதாபிமானமற்ற அடாவடித்தனமான செயலாகும்.
மக்களின் வாக்குகளை பெற்று வாழும் அரசியல்வாதியே இந்த நிலத்ததடி நீரை விற்று பிழைப்பது ஓர் அற்பத்தனமான செயலாகும்.
முடியுமென்றால் தண்ணீர் தொழிற்சாலையை நிறுத்தி பாருங்கள் என்று சவால் விடும் அரசியல்வாதிகளே உங்களின் ஆணவ போக்கால் நாளாந்தம் வளர்ச்சியடையும் இந்த போராட்டம் இரு சமூகங்களுக்கிடையில் ஒரு விரிசல் நிலையை ஏற்ப்படுத்தும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
கடுவல நவகிரியவில் யானை சோடா தொழிற்சாலையால் அந்த பிரதேசத்தின் கிணறுகள் வற்றிய துர்ப்பாக்கிய நிலை எங்கள் சமூகத்திற்கும் ஏற்பட நாங்கள் இடமளிக்க மாட்டோம். ஏன தமிழ் உணர்வாளர்களின் தலைமையகம் விடுக்கும் செய்தி என அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment