அம்பாறை மாவட்ட கரையோரத்தின் அக்கரைப்பற்று – பொத்துவில் ஏ4 பிரதான சாலையில் 60ம் கட்டை என்னுமிடத்தில் கனகர்கிராம தமிழ் மக்களின் காணிமீட்புப் போராட்டம் தொடங்கி (02) நேற்றுடன் 50 தினங்கள் ஆகும்.
நேற்றுமுன்தினம் இரவு அந்தப் பகுதியில் நீண்ட காலத்திற்குப் பிறகு மழை பெய்திருக்கிறது. வரட்சியின் உச்சக்கட்டத் தாண்டவம் ஆடியதும் அங்குதான்.கொட்டிலில் தங்கியிருந்து நிலமீட்புப் போராட்டம் நடத்தி வரும் மக்கள் மழையினால் பலத்த சிரமத்திற்குள்ளாகினர்.ஆனாலும் அவர்கள் அவ்விடத்தை விட்டு அகலவில்லை.
இதுவரை பாராளுமன்ற உறுப்பினர் உட்பட பல அரசியல்வாதிகள், சமுகசேவையாளர்கள் எனப் பலரும் வந்து அம்மக்களுடன் கலந்துரையாடி பல உறுதிமொழிகளையும் அளித்துள்ளார்கள். வனத்துறை உயரதிகாரி,அரசஅதிபர், கிழக்கு காணி ஆணையாளர் போன்றோர் இக்காணியை மீளளிக்க உறுதி கூறியுள்ள போதிலும் எதுவுமே நடக்கவில்லை.
அம்மக்கள் காட்டுப்பகுதியின் வீதியோரத்தில் முகாமிட்டு, இரவுபகலாக தங்கியிருந்து போராட்டத்தை நடாத்தி வருகின்றனர். அந்தமுகாம் தற்போது இரண்டாகியுள்ளது. பால் அருந்தும் குழந்தைகள் தொடக்கம் தள்ளாடும் வயோதிபர்கள் வரை அங்கு தங்கியுள்ளனர்.அருகில் தண்ணீர் வவுசரொன்று நிறுத்தப்பட்டுள்ளது. அங்கேயே அடுப்புமூட்டி சமையல் செய்கின்றனர். இடையிடையே தேநீர் போடுகின்றனர்.
அங்கு இறுதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க, கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அனுர தர்மதாச, உதவிகாணிஆணையாளர் எஸ்.ரவிராஜன் உள்ளிட்ட குழுவினர் வந்து பார்த்து கலந்துரையாடியதும் மக்கள் நம்பிக்கை கொண்டவர்களாகவுள்ளனர்.
இங்கிருக்கக் கூடிய 30வீட்டுத் திட்டத்திலிருந்தவர்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. அதனை விடுவிக்கலாம். ஆனால் மொத்தமாக 278 குடும்பங்கள் வாழ்ந்துள்ளன. அவற்றை உறுதிப்படுத்துவதற்கு சில ஆவணங்கள் தேவை. பெர்மிட் அல்லது பக்கத்து காணிச் சொந்தக்காரர்களின் பெர்மிட் தேவை.
அங்கு வாழ்ந்த போது எடுத்த பிறப்பு, விவாகச்சான்றிதழ்களின் பிரதிகள் அல்லது புனர்வாழ்வுக்காக பெற்றுக் கொண்ட கடன் உதவி சான்றிதழ், வாக்காளர் அட்டை இப்படி ஏதாவது ஒரு ஆவணத்தையாவது காட்டுகின்ற பட்சத்தில் அதனை பரிசீலனை செய்து காணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது.
அவர்கள் கடந்த 50நாட்களைக் கடந்து தகரக்கொட்டிலில் இருந்து போராடுகின்றனர். அவர்களிடமிருந்து பல தரவுகள் திரட்டப்பட்டுவருகின்றன. அந்த ஆவணங்கள் யாவும் எதிர்வரும் 16ஆம் திகதிக்கு முன்பு பொத்துவில் புதிய பிரதேசசெயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளன.
இதற்கென அந்த மக்கள் மத்தியிலிருந்து 10பேர் கொண்ட குழுவும் தெரிவு செய்யப்பட்டு இயங்கி வருவதைக் காணக் கூடியதாயிருந்தது.
இந்த ஆவணங்களை ஒப்படைக்கின்ற இறுதித் தினம் ஒக்டோபர் 16 ஆகும். அன்று அவற்றை பரிசீலனை செய்யலாமென வந்த குழுவினர் கூறியிருப்பது மக்கள் மத்தியில் பெரும் திருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இற்றைக்கு 58 வருடங்களுக்கு முன்பிருந்து வாழ்ந்து வந்த தமது காணிகளைக் கோரி அந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
1960 களில் 278 குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. 1981 களில் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் முன்னாள் எம்.பி. அமரர் எம்.சி.கனகரெத்தினத்தின் முயற்சியால் வீடுகட்ட அரை ஏக்கர் நிலமும் பயிர் செய்ய 2 ஏக்கர் நிலமும் தரப்பட்டு 30 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அவர்கள் மகிழ்ச்சியாக சேனைப்பயிர்ச்செய்கையுடன் வாழ்ந்து வந்தனர்.
1990 களில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அவர்களை கடந்த 28 வருடங்களாக அங்கு குடியேற அனுமதிக்கவில்லையென்பது பிரதான குற்றசாட்டாகும்.
அவர்கள் வாழ்ந்த பிரதேசம் இன்று மிகவும் பயங்கரமான சூரப்பற்றைகளினால் சூழ்ந்து காடுமண்டிக் காணப்படுகின்றது. அந்தக் காட்டினுள் பாழடைந்து இடிந்து தகர்ந்த நிலையில் அவர்களது 30 வீடுகளும் காணப்படுகின்றன. கூடவே அவர்கள் பாவித்த மலசலகூடங்களும் தகர்ந்த நிலையில் காணப்படுகின்றன. அதாவது அந்த மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் நிறையவேயுள்ளன.
காணிமீட்புக் குழுவின் தலைவி புஞ்சிமாத்தயா றங்கத்தனா கூறுகையில் "எமது போராட்டம் 50 நாட்களைத் தாண்டுகின்றபோதிலும், நாம் சற்றும் மனம் தளரவில்லை. இங்கு 278 குடும்பங்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்தோம். இந்த 60 ஆம் கட்டையில் 1238 ஏக்கர் காணியுண்டு. நாம் இங்கு கேட்பது நாம் வாழ்ந்த காணியையே தவிர வேறெதுவுமல்ல.
இறுதியாக அம்பாறை அரசஅதிபர் மற்றும் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் உள்ளிட்ட குழுவினர் இங்கு வந்து எம்மோடு பேசி இப்பிரதேசத்தைப் பார்வையிட்டனர். அழிந்த வீடுகளைப் பார்வையிட்டனர். அப்போது அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சட்டப்படி மிக விரைவில் இதனை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளமை எமக்கு மகிழ்ச்சியையளிக்கிறது. நாம் அவர்களை நம்புகிறோம்"என்றார்.
அங்கிருந்த 74வயதான எம்.வடிவேல் எனும் வயோதிபர் அழுதபடி கூறுகையில் "நானும் எனது 4 பெண்பிள்ளைகளும் இங்குதான் வாழ்ந்து வந்தோம். தற்போது பொத்துவில் குண்டுமடுவில் பல சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றோம்.
எமது காணி கிடையாவிடின் நான் இந்த இடத்திலேயே உயிரை விடுவேன். யார் என்ன சொன்னாலும் எமக்கு நிரந்தரமான எழுத்துமூல தீர்வு கிடைக்கும் வரை இந்த இடத்தை விட்டு அகல மாட்டோம். வருவது மழைக் காலம்.
எனவே நாம் மழைக் காலத்திலும் பாதுகாப்பாக இருப்பதற்காக மேலும் புதிதாக இரு தகரக்கொட்டில்களை அமைத்துத் தந்த காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் ஜெயசிறிலுக்கும் பொத்துவில் உபதவிசாளர் பார்த்திபனுக்கும் நன்றிகளைக் கூறுகின்றோம்" என்றார்.
எம்.இராசா என்பவர் கூறுகையில் "1960 இல் இங்கு வந்து நாம் குடியேறியதனால் இதனை 60ஆம் கட்டை என்று கூறுவர். 1981 இல் எம்.சி.கனகரெத்தினம் எம்.பி. இந்த 30 வீட்டுத் திட்டத்தை ஏற்படுத்தித் தந்தார். அப்போது நாம் 276குடும்பங்கள் சந்தோசமாக வாழ்ந்து வந்தோம்.
1990 வன்முறையின் போது நாம் இடம்பெயர நேரிட்டது. இப்போது 28 வருடங்களின் பின்பு இங்கு வர முடிந்தது. ஆனால் காணி மறுக்கப்படுவது வேதனையாகவுள்ளது. எமது காணியைத்தானே கேட்கிறோம். இறைவன் இரங்கட்டும்!எமது போராட்டத்தின் மூலம் பலரை இனங்கண்டிருக்கிறோம்.
நாம் வாக்களித்தவர்கள் என்ன செய்தார்கள்? வாக்களியாதவர்கள் என்ன செய்தார்கள்? என்பதையெல்லாம் அறிந்து கொண்டோம். யாரோவெல்லாம் கேட்காமலேயே வந்து உதவி செய்தார்கள்? தார்மீக கடமையிருந்தும் செய்யாதவர்கள் யார் என்பதையெல்லாம் அறிந்துள்ளோம். காலநேரம் வரும்.அதை அப்போது வெளிப்படுத்துவோம்" என்றார்.
அங்கு அடிக்கடி சென்று வரும் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் கூறுகையில் "பகல்பொழுதிலும் இந்த பிரதான வீதியால் பயணிகள் செல்வதற்கு அஞ்சுவார்கள். காரணம் யானையின் நடமாட்டம். அப்படிப்பட்ட யானைக்காட்டிற்குள் 50 வது நாளைத் தாண்டி போராட்டம் நடாத்துகிறார்கள். இன்னும் சம்பந்தப்பட்டவர்களுக்கு கண்திறக்கவில்லையா?
இந்த யானைக்காட்டிற்குள் அந்த அதிகாரிகளின் அல்லது அரசியல்வாதிகளின் குடும்பங்கள் இருந்திருந்தால் என்ன நடக்கும்?கடந்த கால அரசுகள் தமிழ்மக்களுக்கு எந்த உரிமையையும் வழங்கவில்லை. இன்றைய நல்லாட்சியாவது எதையாவது செய்யும் என இன்னும் நம்புகிறோம்.
இந்த நாட்டில் தமிழ்மக்கள் பாவம் செய்தவர்கள். முக்கிய தினங்களில் கூட தமது உரிமைக்காகப் போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை. சிறுவர், வயோதிபர் தினங்களிலும் போராடும் அவலத்தை இங்கு காண்கிறேன்" என்றார்.
50 நாட்களைக் கடந்தும் அந்த மக்கள் மனவுறுதியோடு, அர்ப்பணிப்போடு தொடர்ந்து போராடுவதைப் பார்க்கின்ற போது அவர்களுக்கான வெற்றி கிட்டுமென்றே நம்பிக்கை ஏற்படுகிறது.
வி.ரி.சகாதேவராஜா
No comments:
Post a Comment