சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, மாணவர்களுக்கான மகிழ்ச்சிகரமான மற்றும் கற்றலுக்கான கற்பித்தல் வளங்கள் கண்காட்சி, மினுவாங்கொடை - கல்லொழுவை, அல் - அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில், இன்று (01) காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை, அதிபர் அல் ஹாஜ் எம்.எச்.எம். காமில் தலைமையில் இடம்பெற்றது.
இக்கண்காட்சி நிகழ்வில், மினுவாங்கொடை கல்வி வலயக் காரியாலய (தமிழ் மொழி மூல) உதவிக் கல்விப் பணிப்பாளர் பதூர்தீன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் வஜிர, சிங்களப் பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
பாடசாலை அதிபரின் வழிகாட்டலில், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழு மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் ஆகியோரது ஒத்துழைப்புடன், இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
"இப்பாடசாலை மாணவர்கள் கல்வியுடன் கூடிய, தமது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தமையை, இக்கண்காட்சியின் மூலம் கண்டு கொண்டேன். மாணவர்கள் தமது திறமைகளை வெளிக்கொணர்வதன் ஊடாக, கல்வி மற்றும் அவர்களின் அறிவு ஆற்றல்களை மேலும் வலுப்படுத்திக் கொள்ள முடியும்" என்று, உதவிக் கல்விப் பணிப்பாளர் பதூர்தீன் தெரிவித்தார்.
"தைரியமாக முன்னோக்கிச் செல்வதற்காக, நமது சிறார்களைப் பலப்படுத்துவோம்" என்ற, கல்வியமைச்சின் இவ்வருட சிறுவர் தின தொனிப் பொருளுக்கு அமைவாகவே, இக்கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளோம். இதற்கு பெற்றோர்களினதும், ஆசிரியர்களினதும், நலன் விரும்பிகளினதும் பாரிய பங்களிப்புக்கள் கிடைத்துள்ளமையைப் பாராட்டுகின்றேன்" என்று இதன்போது அதிபர் சுட்டிக்காட்டினார்.
ஐ. ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment