ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கை, ஒக்டோபர் 30 ஆம் திகதியில் இருந்து தினம் தோறும் தொடர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள விஷேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான மனு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று (28) விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி வரையான காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதால் பொதுச் சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் பிரதிவாதிகள் குற்றமிழைத்துள்ளதாக குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டுடன் தொடர்புடைய ஆவணங்கள் வழங்கப்பட்ட போதிலும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஆவணங்கள் இதுவரை வழங்கப்படவில்லை என்று பிரதிவாதிகள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி அலி சப்ரி நீதிமன்றில் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அரச தரப்பு பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல், கேட்கும் ஆவணங்களை சில தினங்களில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
அதன்படி அந்த ஆவணங்கள் கிடைக்கப்பெற்றதாக என்பதை உறுதிப்படுத்துவதற்காக வழக்கை மீண்டும் ஒக்டோபர் 08ம் திகதி அழைப்பதாகவும், உத்தரவிடப்பட்டது.
அத்துடன் இந்த வழக்கு ஒக்டோபர் 29 ஆம் திகதியில் இருந்து தொடர் விசாரணையாக இடம்பெறும் என்று முன்னதாக உத்தரவிடப்பட்டிருந்த போதிலும், உச்ச நீதிமன்றில் மற்றொரு முக்கிய வழக்கு இருப்பதால் இந்த வழக்கை 30ம் திகதியில் இருந்து ஆரம்பிக்குமாறு பிரதிவாதியின் சட்டத்தரணி அலி சப்ரி விடுத்த கோரிக்கையையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment