கலவரம் அல்லது ஆர்ப்பட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தால் அதில் எம்மவர் ஒருவர் பங்குபற்ற சென்றால் அவர் அது தொடர்பான சட்டத்தை அறிந்து இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
இது தெரியாமல் எமது பல இளைஞர்கள் புதினம் பார்க்க சென்று மாட்டிக் கொள்வது வழமையாக நாம் கண்களின் ஊடாக பார்க்கின்ற ஒரு விடயம் ஆகும். இன்றும் கூட எங்கு எப்படி என்ற விடயங்கள் எதுவும் சொல்லப்படாமல் கூட்டு எதிர்க்கட்சியினால் ஆர்பாட்டம் ஒன்று நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் பல பக்கம் இருந்தும் கசிந்து கொண்டு இருக்கின்றது.
இங்கு நாம் நோக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவெனில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் சட்ட ரீதியாக செய்யப்படுகிறதா? என்பதையே ஆகும். பொதுவாக ஆர்ப்பாட்டங்கள் செய்யப்படுவதன் நோக்கம் அரசாங்கத்துக்கு எதிர்ப்பை காட்டுவதன் ஊடாக உலக மக்களுக்கும், உலக நாடுகளின் அரசுகளுக்கும் தங்களின் நிலைப்பாட்டை எடுத்து காட்டுவதே ஆகும்.
இவ்வாறு அரசாங்கத்துக்கு தங்களின் எதிர்ப்பை காட்ட ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கில் செய்யப்படும் ஆர்ப்பாட்டங்கள் எதுவும் சட்ட ரீதியாக அனுமதி வழங்கப்பட முடியாத ஒன்று ஆகும். அதில் கலந்து கொள்ளும் அனைவரும் சட்டரீதியற்ற முறையில் அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்த தேச துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்படலாம் என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.
மேலும் பொதுவாக ஆர்ப்பாட்டங்களை அல்லது எதிர்ப்பு பேரணிகளை எவ்வாறான முறையில் அரசாங்கம் கலைக்கலாம்? அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கலாமா? இது தொடர்பாக எமது நாட்டின் சட்டம் கூறுவது என்ன என்று தொடர்ச்சியாக நோக்குவோம் இலங்கையின் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக் கோவை சட்டம் பிரிவு 95 சட்ட விரோதமான கூட்டத்தை கலைத்தல் பற்றிய ஏற்பாடுகளை கொண்டு காணப்படுகின்றது.
அதன் படி பிரிவு 95 (1) – எவரேனும் நீதவான் அல்லது பொலிஸ் பரிசோதகர் (Inspector Of Police) பதவிக்கு குறையாத பதவியை உடைய எவரேனும் பொலிஸ் அலுவலர் ஏதேனும் சட்ட விரோத கூட்டத்தை அல்லது பொதுமக்கள் சமாதானத்தை குழப்பக்கூடிய சாத்தியம் உள்ள ஐந்து அல்லது ஐந்து க்கும் அதிகமான ஆட்களைக் கொண்ட ஏதேனும் கூட்டத்தை கலைந்து செல்லும் படி ஆணையிடலாம் என்பதுடன் அவ்வாறு ஆணையிட்டால் உடனடியாக கலைந்து செல்ல வேண்டியது அக் கூட்டத்தின் கடமையாதல் வேண்டும்.
எனவே மேற்சொன்ன சட்ட பிரிவின் பிரகாரம் நோக்கும் போது எமக்கு பல விடயங்கள் தென்படுகிறது. இங்கு கூட்டத்தை கலைந்து செல்லுமாறு உத்தரவு பிறப்பிக்கப்படும். பிறப்பிக்கப்பட்ட உடனயே கட்டாயம் கலைந்து செல்ல வேண்டும். அவ்வாறு கலைந்து செல்லாமல் இவர்கள் கூடி இருப்பது பொது மக்கள் மற்றும் பொது விடயங்களுக்கு இடையூறாக இருக்கும் என கருத்தப்பட்டால் அத்துடன் இந்த ஆட்கள் பொதுச் சொத்துக்களை சேதமாக்குவது போல நடந்து கொண்டால் அவர்கள் கட்டாயம் கலைந்து செல்ல வேண்டியது நாட்டுக்கு உசிதம் என்ற நிலமை காணப்பட்டால் என்ன நிலைமை என பிரிவு 95 (2) ஏற்பாடு செய்கின்றது.
பிரிவு 95 (2) – இவ்வாறு ஆணையிடப்பட்டதன் மேல் அத்தகைய கூட்டம் எதுவும் கலைந்து செல்லாவிடின் அல்லது அவ்வாறு ஆணையிடப்படாமலிருந்தும் கலைந்து செல்லாதிருப்பது போல் அக்கூட்டம் நடந்து கொண்டால் நீதவான் அல்லது பொலிஸ் அலுவலர் அக்கூட்டத்தை கலைக்க நியாயமான அளவு அவசியமாக கூடியவாறான பலப்பிரயோகத்தை மேற்கொள்ளலாம் இதனூடாக அத்தகைய கூட்டத்தை கலைக்க முற்படலாம்.
அத்துடன் இத்தகைய கூட்டத்தை கலைக்கும் நோக்கத்திற்காகவும் சட்டத்துக்கு இணங்க அவர்களை தண்டிக்கும் முகமாகவும் அக்கூட்டத்தின் ஒரு பகுதியினராக உள்ள ஆட்களை கைது செய்து தடுத்து வைக்கும் நோக்கிற்காகவும் Army, Navy, Airforce போன்ற ஆட்கள் அல்லாத வேறு ஆட்களின் உதவியைக் கோரலாம். எனவே மேற்சொன்ன பிரிவின் படி நோக்கினால் சட்ட விரோத கூட்டத்தை கலைக்க இயன்ற அளவு பலம் பொலிசினால் பிரயோகிக்கப்படலாம் என்பது புலனாகின்றது. அதனூடாக பலரை கைது செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடுகள் அனைத்தும் கலைந்து செல்ல மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் மேற்கொள்ளப்படும்.
இங்கு இராணுவ பலம் பிரயோகிக்க முடியாது. அவ்வாறு பிரயோகித்தால் அது பொலிஸார் சட்டத்தை மீறியதாக கருதப்படும். எனவே எப்போது இராணுவ பலத்தை பிரயோகித்து சட்ட விரோத கூட்டத்தை கலைக்கலாம் என்று நோக்கும் போது இது தொடர்பில் பிரிவு 95 (3) ஏற்பாடுகளை கொண்டுள்ளது. பிரிவு 95 (3) – அத்தகைய கூட்டம் எதுவும் வேறு விதத்தில் கலைக்கப்பட முடியாததாகவும், அத்துடன் பொது மக்கள் பாதுகாப்புக்கு அது கலைக்கப்பட வேண்டியது அவசியமாகவும் இருப்பின் ஒரு நீதவான் அல்லது அந்த மாவட்டத்துக்கான அரசாங்க அதிபர் அல்லது பொலிஸ் கண்காணிப்பாளர் (SP) பதவிக்கு குறையாத பதவி உடைய எவரும் Army, Navy, Airforce எவரேனும் வீரரை சட்டத்தின் அடிப்படையில் ஆணை பெற்ற அதிகாரியை கட்டளை இட்டு கூறுவதன் பெயரில் இராணுவ வலுவைப் பயன்படுத்தி அக்கூட்டத்தை கலைக்கலாம்.
மேலும் இத்தகைய கூட்டத்தை கலைக்கும் நோக்கத்திற்காகவும் சட்டத்துக்கு இணங்க அவர்களை தண்டிக்கும் முகமாகவும் அக்கூட்டத்தின் ஒரு பகுதியினராக உள்ள ஆட்களை கைது செய்து தடுத்து வைக்கவும் முடியும். இதற்கு இணங்க தேவையான அளவு பலப்பிரயோகம் மேற்கொள்ள முடியும். ஆனால் இயன்றளவு தாக்கத்தை குறைக்கும் முகமாகவே செயற்பட வேண்டும்.
முக்கியாமாக இங்கு பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்கப்பட்டால் உடனடியாக அதனை தடுத்து நிறுத்த இயன்றளவு பலத்தை பொலிஸ் பிரயோகிக்கும் என்பது முக்கியமான விடயம் ஆகும். எனவே மேற்சொன்ன விடயத்தை நோக்கும் போது சட்ட விரோத கூட்டம் ஒன்றை எவ்வாறு அரசாங்கம் கலைக்கலாம் என்பது தெளிவாகிறது. எனவே அதன் அடிப்படையில் பலரை கைது செய்யவும் தடுத்து வைக்கவும் அதிகாரம் பொலிஸுக்கு காணப்படுகின்றது.
எனவே இனிமேல் கலக பிரதேசங்களுக்கு செல்லும் போது இச்சட்டத்தை அறிந்து செசெல்வது எமக்கான ஒரு சுய பாதுகாப்பாக அமையும் என நான் கருதுகின்றேன்.
குறிப்பு - சட்ட ரீதியாக அனுமதி வழங்கப்பட்ட ஆர்பாட்டம் கூட எந்த நேரமும் சட்டரீதியற்றதாக மாறலாம்.
Mohamed Ithrees Iyasdeen LL.B (Hons)
Col. Attorney at law (App)

No comments:
Post a Comment