யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களால் கொக்குவிலில் உள்ள கோவில் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்களும் மர்ம நபர்கள் அணியும் ஆடைகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.
சட்டவிரோத கும்பல் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் இன்று (27) காலை சுன்னாகம் பகுதியில் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது 20 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோண்டாவில் மற்றும் தெல்லிப்பளை பகுதிகளைச் சேர்ந்த இவர்களிடமிருந்து 5 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அவர்களிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில் கொக்குவிலில் உள்ள இந்து ஆலயம் ஒன்றின் கோபுரத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டன.
6 கைக் கோடரிகள் மற்றும் 3 வாள்கள், மர்ம நபரைப் போல அடையாளம் தெரியாத முறையிலான இரண்டு ஆடைகளும் இவ்வாறு மீட்கப்பட்டன என்று சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment