முல்லைத்தீவு மாங்குளம் மல்லாவி வீதியில் மாங்குளம் நகர இறுதியில் உள்ள தேக்கங்காட்டுப்பகுதியில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது வெடிபொருள் வெடித்ததில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
நேற்று (04) இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில், வெடிபொருள் வெடித்தததில் கிளிநொச்சி, பரவிபாஞ்சானை சேர்ந்த 28 வயது பத்மநாதன் திலீபன் எனும் கிளிநொச்சியைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளதுடன் ஓமந்தையைச் சேர்ந்த 25 வயதுடைய நிதர்சன் என்பவர் காயமடைந்துள்ளார்.
மிதிவெடி அகற்றும் நிறுவனமான DASH யில் பணிபுரியும் ஊழியர்கள் குறித்த பகுதியில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கையில் வழமை போன்று ஈடுபட்டிருந்த போது இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட இருவரும் மாங்குளம் மருத்துவமனை கொண்டு சென்ற போதும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது உடலம் மாங்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மற்றையவர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் யுத்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் இருப்பதாக அறிந்து கடந்த ஓகஸ்ட் (04) முதல் மிதிவெடி அகற்றும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவகின்றது.
இன்றுவரை குறித்த பிரதேசத்தில் 60mm Motar - 31, 81mm Motar - 03, RPG T-69 Appers - 01, 40 mm R/G - 44, SFG 82 H/G - 01 ஆகிய 80 வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக குறித்த வெடிபொருள் அகற்றும் நிறுவன தரவுகளில் காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
No comments:
Post a Comment