கிளிநொச்சி மாவட்டத்தில் கல்விக்காகப்போராடும் வறிய மாணவர்களுக்கு கைகொடுக்க முன்வந்துள்ளது புலம்பெயர் அமைப்பான வன்னி வளத்துக்கான புதிய சந்தர்ப்பங்கள் எனப்படும் நோவா (NOVA) அமைப்பு.
மிகமுக்கியமான வரலாற்று காலகட்டத்தில் பல்வேறுபட்ட பணிகளை ஆற்றி வந்த (NOVA) அமைப்பு அண்மையில் வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தில் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், துவிச்சக்கர வண்டி போன்றவற்றை கையளிக்கும் நிகழ்வை நடாத்தியிருந்தது. குறித்த நிகழ்வின் முதன்மை விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து சிறப்பித்தார்.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றுகையில் வன்னியிலே கல்விக்காக சந்தர்ப்பங்களைத் தேடிக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு கைகொடுப்பதற்கு கனடா நாட்டினுடைய மொன்றியல் மாநிலத்தின் வன்னி வளத்துக்காக புதிய சந்தர்ப்பங்கள் அமைப்பு எடுத்திருக்கும் இம்முயற்சி மிகவும் பாராட்டுக்குரியதும் மகிழ்ச்சிக்குரியதுமாகும்.
இவ் நோவா அமைப்பு என்பது மொன்றியல் நகரில் வாழ்கின்ற பல்வேறுபட்ட தமிழ்ப் புலம்பெயலாளர்களுடைய கூட்டு முயற்சியின் பலனாகவே இது உருவானது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இந்த அமைப்பு பல்வேறுபட்ட மனித நேயப்பணிகளை வன்னிப்பகுதிகளில் குறிப்பாக முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு போன்ற இடங்களிலே இந்த அமைப்பு செய்து வந்திருக்கின்றது.
இதனூடாக பல்வேறுபட்ட மக்கள் மாணவர்களுடைய தேவைகளும் வாழ்வாதாரங்கள் மற்றும் நோய்த்தாக்கங்களில் இருந்து மீள்வதற்கு உதவிகளை இந்த அமைப்பு செய்து வருகின்றது.
இந்தப்பணிகளுக்கு மூலகர்த்தாவாக இருந்து செய்து வருகின்ற நண்பர் தெய்வேந்திரம் அவர்கள் மிக முக்கியானவர். அவருடைய வழிகாட்டுதல் மற்றும் அவருடைய சிந்தனையை அங்கிருக்கின்ற புலம் பெயர் தமிழர்களும் அவரோடு இணைந்த வகையில் எங்களுடைய அருட்தந்தை யூட்அமலதாஸ் அவர்கள் அங்கு மொன்றியல் நகரில் பங்குத்தந்தையாக இருந்த போது இணைந்து உருவாக்கிய அமைப்பே இதுவாகும். இதனூடாக இவ்வாறான கல்விப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பது ஒரு வரலாற்றின் தொடக்கமாகும்.
ஏழை மாணவர்கள் பலர் தமது கல்விக்காலத்திலே பாடசாலைக்கு செல்கின்றபோதும் தங்களுடைய கல்வித்தேவைகளை பூர்த்தி செய்ய முடியாதவர்களாக இருக்கின்றனர். பல்கலைக்கழகம் செல்கின்ற போதும் அவர்களால் கல்வித்தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கிறாரர்கள். சில குடும்பங்கள் கல்வி சார்ந்த தேவைகளுக்காக சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
ஆகவே இவ்வாறான மாணவர்களின் கல்வி நுகர்வை இன்னும் அபிவிருத்தி செய்யும் வகையில் அவர்களின் தேவையை இனங்கண்டு இவவமைப்பு உதவி செய்து வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் தனது உரையில் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் அருட்தந்தை யூட்அமலதாஸ், வடக்கு மாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா, மாணவர்கள் பெற்றோர், அதிபர், ஆசிரியர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment