தேன் எனத் தெரிவித்து சீனிப்பாணி விற்பனை செய்தவர் கைது - வவுனியாவில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Monday, August 6, 2018

தேன் எனத் தெரிவித்து சீனிப்பாணி விற்பனை செய்தவர் கைது - வவுனியாவில் சம்பவம்

வவுனியாவில் நீண்ட காலமாக வியாபார நிலையங்களுக்கு தேன் எனத் தெரிவித்து சீனிப்பாணியை விற்பனை செய்து வந்த நெளுக்குளம் பகுதியிலுள்ள நபர் ஒருவரை 10 போத்தல் சீனிப்பாணியுடன் கைது செய்துள்ளதாகவும் அவரிடமிருந்து சட்டவிரோதமாக தேன் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் வவுனியா மேற்பார்வை பொது சுகாதாரப் பரிசோதகர் க.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா மரக்காரம்பளையிலுள்ள வியாபார நிலையம் ஒன்றிற்கு தேன் எனத் தெரிவித்து சீனிப்பாணி நீண்ட நாட்களாக விற்பனை செய்து வரப்பட்டுள்ளது. இதையடுத்து வியாபார நிலைய உரிமையாளர் வவுனியா மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகருக்கு தகவல் வழங்கிய அடிப்படையில் நேற்று காலை (05) விற்பனை செய்வதற்கு எடுத்துவரப்பட்ட 10 போத்தல் சீனிப்பாணியுடன் நெளுக்குளம் ஊர்மிலா கோட்டத்திலுள்ள நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது நெளுக்குளம் ஊர்மிலா கோட்டத்திலிருந்து சீனிப்பாணி தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்களையும் மீட்டுள்ளனர். மேலும் ஒரு வீட்டில் சோதனை மேற்கொள்ளச் சென்றபோது அவ்வீட்டில் எவரும் இருக்கவில்லை.

இவ்வாறு குறித்த நபரிடமிருந்து 50ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை கைப்பற்றியுள்ளதாகவும் சந்தேக நபர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

அத்துடன், வியாபார நிலைய உரிமையாளர்கள் இனந்தெரியாதவர்களிடம் தேன் பெற்றுக்கொள்ள வேண்டாம். தேன் போத்தல் விற்பனை செய்யவருபவர்களின் போத்தலில் சுற்றுத்துண்டு இருந்தால் மட்டும் பெற்றுக்கொள்ளவும். இவ்வாறு சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்யவேண்டாம் என்று வியாபார நிலைய உரிமையாளர்களிடம் கேட்டுக்கொள்வதாக மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment