இனவாதத்தைத் தூண்டும் இன்பராசாவுக்கெதிராக அரசு சட்ட நடவடிக்கையெடுக்க வேண்டும் – ஓட்டமாவடி உதவித்தவிசாளர் யூ.எல்.அஹமத் லெப்பை - News View

About Us

About Us

Breaking

Thursday, August 30, 2018

இனவாதத்தைத் தூண்டும் இன்பராசாவுக்கெதிராக அரசு சட்ட நடவடிக்கையெடுக்க வேண்டும் – ஓட்டமாவடி உதவித்தவிசாளர் யூ.எல்.அஹமத் லெப்பை

இனவாதத்தைத்தூண்டும் இன்பராசாவுக்கெதிராக அரசு நடவடிக்கையெடுக்க வேண்டுமென கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் உதவித்தவிசாளர் யூ.எல்.அஹமத் லெப்பை தெரிவித்தார்.

கடந்த 30 வருட கால யுத்தத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின் உயிர், உடமைகள் நிலங்களை இழந்து தற்போது யுத்த முடிவின் பிறகு நிம்மதியாக வாழும் காலத்தில் அதன் பின்னர் அளுத்கமை, அம்பாரை, திகண போன்ற பிரதேசங்களில் ஏற்பட்ட இனரீதியான இழப்புக்களிலிருந்து மனம் நொந்து போயிருக்கும் கால கட்டத்தில் மீண்டும் முஸ்லீம்களை துன்ப நிலைக்கு இட்டுச் செல்லும். 

இனமுறுகளைத் தோற்றுவிற்கக்கூடிய இவ்வாறான இனவெறுப்பு பிரசாரம் இலங்கை வாழ் முஸ்லிம்களை விஷேடமாக கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களை இந்நாட்டிற்கு விரோதமானவர்களாகவும் தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கும் செயற்பாடாகும்.

இவ்வாறு போலிப்பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் தமிழ் கட்சியின் தலைவரான கந்தசாமி இன்பராசாவுக்கெதிராக விசாரணை மேற்கொண்டு சட்ட நடவடிக்கையெடுக்கப்படல் வேண்டும்.

திருகோணமலை சம்பூர் 6 ம் வட்டாரத்தைச் சேர்ந்த இவர், திருகோணமலை கன்னியா மேர்சி கிராமம் இலக்கம் 10 ல் தலைமையகத்தைக்கொண்ட புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் தமிழ் கட்சியின் தலைவரான கந்தசாமி இன்பராசா கடந்த 18.08.2018ம் திகதியன்று கொழும்பில் ஊடகவியலாளர்களை ஒற்றுகூட்டி ” அரசிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகள் தங்களது ஆயுதங்களை முஸ்லிம்களிடம் விற்றுள்ளனர்.

விற்கப்பட்ட ஆயுதங்கள் அவர்களிடம் இருப்பதனால் மற்றைய இனங்களுக்கும் இது ஆபத்தானதென பொய்யான தகவலைக்கூறி, இனங்களினிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அமைச்சர் றிஸாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இதன் பின்னணியில் செயற்படுவதாகவும் கூறியுள்ளார்.

இது உண்மைக்குப் புறம்பான ஒரு செய்தியாகும் அவ்வாறு உண்மையெனில், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், இவ்வாறு போலிப்பிரசாரங்களை மேற்கொண்டு பல்லின மக்கள் வாழும் நாட்டில் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் கருத்துக்களைக்கூறி நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடும் இன்பராசா போன்றோருக்கெதிராக பொலீசாரும், நீதித்துறையும் சட்ட நடவடிக்கையெடுக்க வேண்டும்.

மாறாக, சமூகம் சார்ந்து முன்வைக்கப்படும் கோரிக்கைகள் உதாசீணப்படுத்தப்படுமாக இருந்தால், அரசுக்கு பாரிய சவாலாக அமையுமென்பதை கவனத்திற்கொண்டு அரசு நடவடிக்கையெடுக்க வேண்டுமென கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் உதவித்தவிசாளர் யூ.எல்.அஹமத் லெப்பை மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment