யாழில் வயோதிப பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தி நகை கொள்ளை - News View

About Us

About Us

Breaking

Sunday, July 1, 2018

யாழில் வயோதிப பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தி நகை கொள்ளை

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் வயோதிப குடும்ப பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி 20 பவுண் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். 

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று (30) அதிகாலை ஒரு மணியளவில் வீட்டின் கூரை ஓடுகளை பிரித்து உட்புகுந்த கொள்ளையர்கள் இருவரே பெண்ணை வன்புணர்ந்து கொள்ளையடித்துள்ளனர். 

குறித்த வீட்டில் வயோதிப தம்பதிகளான கணவன் மனைவி இருவரே வாழ்ந்து வருகின்றார்கள். கணவன் நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளார். 

இந்நிலையில் நேற்று அதிகாலை முகமூடி அணிந்த நிலையில் உட்புகுந்த கொள்ளையர்கள் கணவனை கட்டிப்போட்டு அவரின் வாயினையும் கட்டி விட்டு, கணவனின் கண் முன்னால் மனைவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளனர். 

பின்னர் மனைவியின் கழுத்தில் இருந்த தாலி உட்பட 20 பவுண் நகைகளை கொள்ளையடித்து உள்ளனர். பின்னர் வீட்டினுள் சுமார் மூன்று மணி நேரம் சல்லடை போட்டு தேடுதல் நடத்திய பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

அதேவேளை வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 59 வயதுடைய குடும்ப பெண் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

அவரது உடல் நிலையை பரிசோதித்ததை வைத்தும், அவரிடம் பெற்ற வாக்கு மூலத்தின் அடிப்படையில் நோக்கினால் வன்புணர்ந்தவர்கள், போதை பொருள் பாவித்து இருக்கலாம் எனும் சந்தேகம் எழுகின்றதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர். 

கடந்த வாரம் பாடசாலை சென்ற சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் இடம்பெற்று அதற்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மீளவும், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குள் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றமை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மக்கள் மத்தியில் அச்ச நிலைமையை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment