கொக்கேன் (Cocaine) போதைப்பொருளுடன் வந்த பிரேசில் நாட்டைச்சேர்ந்த ஒருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் (30) 30 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளதாக, சுங்கத் திணைக்கள பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.
நேற்றைய தினம் பிரேசிலிலிருந்து கட்டார் (டோஹா) வழியாக கட்டுநாயக்கா விமான நிலையம் வந்த விமானத்தில் 30 வயதான குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் உடலின் ஸ்கேன் படம் மூலம் அவரது வயிற்றில் உருண்டைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அத்துடன் சந்தேகநபர் தொடர்பில் ஏற்கனவே பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கும் இரகசிய தகவல் கிடைத்ததால் அவர், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுங்கத் திணைக்கள பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.
இதனையடுத்து சந்தேகநபர், பொலிசாரால் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவரது வயிற்றிலிருந்து 26 பொதி செய்யப்பட்ட சிறு கொக்கேன் உருண்டைகள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதன் பின்னர், குறித்த சந்தேகநபரிடமிருந்து இவ்வாறான மேலும் 40 கொக்கேன் உருண்டைகள் வெளியே எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதற்கமைய, குறித்த சந்தேகநபரிடமிருந்து 66 கொக்கேன் உருண்டைகள் மீட்கப்பட்டதோடு, மொத்தமாக 500 கிராம் கொக்கேன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவற்றின் பெறுமதி ரூபா 1 கோடி 40 இலட்சத்திற்கும் அதிகமாகும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
No comments:
Post a Comment